முகநூல் பதிவால் எழுந்த சர்ச்சை காரணமாக கார் ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு இடையன்காட்டுவலசு சின்னமுத்து வீதியை சேர்ந்தவர் சண்முகம் (35). இவரது மனைவி மரகதமலர் (25). இத்தம்பதியினருக்கு சியாமளா (4) என்ற பெண் குழந்தை உள்ளது.
ஈரோடு அருகே மாமரத்துப்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன், செல்வம் ஆகியோர் சண்முகத்தின் நண்பர்களாக இருந்து வந்தனர். இவர்கள் மூவரும் முகநூலில் கணக்கு வைத்துள்ளனர்.
இந்நிலையில், செல்வத்தின் முகநூலில் பெண்கள் தேவையா? என தலைப்பிட்டு கார்த்திக்கேயனின் செல்போன் எண்ணுடன் ஒரு பதிவு போடப்பட்டிருந்ததாம். இந்தப் பதிவு வெளியிடப்பட்ட சில நாள்களாக கார்த்திகேயனின் செல்போனுக்கு இளைஞர்கள் ஆபாசமாக பேசி வந்தார்களாம்.
இதனால், ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன், இது தொடர்பாக செல்வத்திடம் வியாழக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சண்முகத்தின் தூண்டுதலின் பேரில்தான் இந்தப் பதிவை தனது முகநூலில் பதிவிட்டதாக செல்வம் கூறினாராம்.
இது தொடர்பாக ஈரோடு-பெருந்துறை சாலையில் காலிங்கராயன் விருந்தினர் இல்லம் அருகே சண்முகம், செல்வம், கார்த்திகேயன் ஆகியோர் வியாழக்கிழமை காரசாரமாக பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது கார்த்திகேயனுக்கும், சண்முகத்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கார்த்திகேயன் தன்னிடம் இருந்த கத்தியால் சண்முகத்தை குத்தி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டாராம்.
இச்சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன், செல்வம் ஆகியோரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.