விருதுநகர் வங்கிக் கிளையில் போலி காசோலை மூலம் ரூ.9.82 லட்சம் மோசடி

விருதுநகரில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கிக் கிளையில் போலி காசோலை கொடுத்து ரூ.9.82 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து
Updated on
1 min read

விருதுநகரில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கிக் கிளையில் போலி காசோலை கொடுத்து ரூ.9.82 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர்-கச்சேரி சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கிளையில் கடந்த மாதம் 6-ம் தேதி மும்பை சிவாஜி நகரைச் சேர்ந்த கிருஷ்ணசந்த் சம்பக் என்பவரின் கணக்கில், மும்பையில் பிரசித்தி பெற்ற தனியார் நிறுவனத்தின் ரூ.9 லட்சத்து 81 ஆயிரத்து 300-க்கான காசோலை போடப்பட்டதாம்.

அதையடுத்து, மறுநாள் மும்பையில் உள்ள இதே வங்கிக் கிளையின் மூலம பணமும் எடுக்கப்பட்டுள்ளது. இக்காசோலை தனியார் நிறுவனத்தின் காசோலை என்பதால், தங்கள் வங்கி கணக்கில் இருந்து மேற்குறிப்பிட்ட தொகை எடுத்துள்ளதாக குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தனியார் நிறுவனத்தினர் நாங்கள் இத்தொகைக்கான காசோலையை யாருக்கும் வழங்கவில்லையென விருதுநகர் வங்கிக் கிளைக்கு தெரிவிக்கப்பட்டதாம். அதன் பின்னர் இங்குள்ள வங்கி அதிகாரிகள் காசோலையை தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது, வடநாட்டு மர்ம நபர் வழங்கியது போலி காசோலை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த வங்கிக் கிளையின் மேலாளர் குமரேசன் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலிஸார் வங்கி கணக்கு ஆவணங்களை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போது, கடந்த மாதம் 6-ம் தேதி மகராஷ்டிரத்தில் உள்ள புணேயில் தனியார் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில், இதே வங்கிக்கிளை மூலம் மணீஸ் கன்னியாலால் தக்கார் என்ற பேரில் ரூ.7.35 லட்சத்தை போலி காசோலை மூலம் மோசடி செய்த அதே நபர்தான், மற்றொருவரின் வங்கி கணக்கு மூலம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக வங்கியின் கண்காணிப்பு வெப் காமிராவில் ஆய்வு செய்த போது கடந்த மாதம் இதே நாளில் 35 வயதுக்குள்பட்ட ஒருவர்தான் போலி காசோலைகளை வெவ்வேறு கணக்குகளில் போட்டவர் என்பது தெரியவந்தது. எனவே இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து போலி காசோலைகளை வங்கியில் கொடுத்து பணத்தை மோசடி செய்த வடநாட்டு நபர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com