விருதுநகர் அருகே இளைஞரின் கையை வெட்டி துண்டாக்கிய சம்பவம் தொடர்பாக ஊராட்சி தலைவி கணவர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் உத்தரவிட்டார்.
திருச்சுழி அருகே சிறுவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக்(18). இவர் கொத்தனாராக வேலை இருந்து வருகிறார். கடந்த மாதம் 18-ம் தேதி வீட்டிற்கு முன்பு நாற்காலியில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தாராம். அப்போது, அவ்வழியாக ஊராட்சி தலைவி தேவியின் கணவர் கிருஷ்ணன்(42) வந்தாராம். கார்த்திக்கை பார்த்து பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதா எனக் கேட்டு தகராறு செய்தாராம். அதையடுத்து 2 நாள்களும் தகராறு செய்து உன்னை காலை வெட்டாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டலும் விடுத்தாராம்.
எனவே பிரச்னை வரும் என நினைத்த பெற்றோர் கார்த்திக்கை உடனே கோவைக்கு பேருந்து ஏற்றி அனுப்பி வைத்தனர். இதையறிந்த, ஊராட்சி தலைவியின் கணவர் கிருஷ்ணன் உள்பட மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் சென்று பேருந்தை வழிமறித்து கார்த்திக்கை கீழே இறக்கியுள்ளனர். பின்னர் தோப்பு பகுதிக்கு அழைத்து சென்று இருவர் பிடித்துக் கொள்ள கிருஷ்ணன் மறைத்து வைத்திருந்த வாளால் இடது கையை வெட்டி துண்டாக்கியதோடு திரும்ப கிடைக்காமல் இருப்பதற்காக தூர வீசிவிட்டு சென்றனர். இதில், காயம் அடைந்த கார்த்திக் அலறியுள்ளார். அப்பகுதியில் இருந்த உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக எ.முக்குளம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து கிருஷ்ணன்(42), முத்துக்குமார்(26), கண்ணன்(38) ஆகியோரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மரியாதை கொடுக்கவில்லை என்பதற்காக இளைஞரின் கையை வெட்டி துண்டாக்கிய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் மேற்குறிபிட்ட மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.