மதுரை ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி கொலை செய்து கொடைக்கானல் பள்ளத்தாக்கில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர்களில் 2 பேர் செவ்வாய்கிழமை விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்தவர் ஜமால் முகமது(61). இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வந்தார். கடந்த சிலநாள்களுக்கு முன்பு இவர் திடீரென மாயமானாது தொடர்பாக அவரது உறவினர்கள் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில், ரியல் எஸ்டேட் அதிபர் சம்பவம் தொடர்பாக மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த சங்கர் என்பவர் மேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தாராம். அவரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்ததில் கொலை செய்து சடலத்தை கொடைக்கானல் மலைப்பகுதி பள்ளத்தாக்கில் வீசியதாகவும், அதில் தொடர்புடையவர்கள் குறித்தும் தெரிவித்தாராம்.
அதன் அடிப்படையில் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக மதுரை கூடல்புதூர் தமிழ்நாடு வீ்ட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜான்பாட்சா என்பவரின் மகன் சித்திக்(36), கூடல் நகரில் தமிழ் நகரைச் சேர்ந்த காமாட்சி என்பவரின் மகன் மாரிமுத்து(37) ஆகியோர் விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இதை விசாரித்த நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் உடனே இருவரையும் 15 நாள்கள் சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.