திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.9 லட்சம் மற்றும் 11.5 பவுன் நகைகளையும் போலீஸார் மீட்டுள்ளனர்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிரபல மருத்துவரின் வீட்டில், கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி ரூ.3 லட்சம் பணம், 11.5 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருள்கள் திருடு போனது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.அதேபோல், கடந்த மாதம் 16ஆம் தேதி திண்டுக்கல் ஆர்எம் காலனி பகுதியில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த ஜெயக்குமாரிடம் ரூ.6 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் வழிபறி செய்தாக, திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த வழக்குகளிலும் தொடர்புடைய 2 இளைஞர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பரவாசுதேவன் தெரிவித்தது:
திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில், திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜ்(எ)ராஜசேகர்(23) மற்றும் மதுரை, நடராஜ் நகரைச் சேர்ந்த முருகன்(28) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், ஆர்எம் காலனியில் நடந்த வழிபறியில் இருவரும் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் வீட்டில் நடந்த திருட்டில், முருகன் மட்டும் ஈடுபட்டுள்ளார்.
வழிப்பறி செய்த பணத்தில், கணினி பயிற்சி பெற்றுள்ள தனது தங்கைக்கு, கணினி மையம் அமைத்துக் கொடுக்க ராஜசேகர் முயற்சி மேற்கொண்டுள்ளார். அதேபோல், தனியார் தொலைத் தொடர்புத் துறையில் கோபுர ஊழியராக பணியாற்றி வந்த முருகன், சொந்தமாக கார் வாங்க முயற்சித்துள்ளார். செல்போன் கோபுரம் அருகில் உள்ள தனி அறையில் மறைத்து வைத்திருந்த நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து ரூ.9 லட்சம் ரொக்கப் பணம், 11.5 பவுன் தங்க நகை மற்றும் 500 கிராம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.
கைதான இருவரும் போலீஸாரின் விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.