எம்.எல்.ஏ.வை கண்டித்து திருநள்ளாறு கோயில் முன்பாக பாமகவினர் முற்றுகைப் போராட்டம்

திருநள்ளாறு கோயில் வருமான இழப்பிற்கு தொகுதி எம்.எல்.ஏ. துணைபோவதாகவும், இதனை தடுக்கவேண்டுமெனக் கூறி பாமகவினர் திருநள்ளாறு கோயில் முன்பாக சனிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
எம்.எல்.ஏ.வை கண்டித்து திருநள்ளாறு கோயில் முன்பாக பாமகவினர் முற்றுகைப் போராட்டம்
Updated on
1 min read

திருநள்ளாறு கோயில் வருமான இழப்பிற்கு தொகுதி எம்.எல்.ஏ. துணைபோவதாகவும், இதனை தடுக்கவேண்டுமெனக் கூறி பாமகவினர் திருநள்ளாறு கோயில் முன்பாக சனிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசிக்க சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சிறப்பு அனுமதி வழங்கும் வகையில் கோயில் நிர்வாக அதிகாரியால், பாஸ் வழங்கப்பட்டுவந்தது. இதில் முறைகேடு நடப்பதை அறிந்த கோயில் நிர்வாகம், பாஸ் வழங்கும் திட்டத்தை ரத்து செய்தது.

இப்போது பக்தர்கள் கட்டண வரிசை, இலவச தரிசன வரிசையின் மூலமே செல்கின்றனர். இந்த நிலையில் திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ.வான பி.ஆர்.சிவா, சிறப்பு அனுமதியளிக்கும் வகையில் பக்தர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு கோயில் நிர்வாகத்திற்கு சிபாரிசு கூப்பன் கையெழுத்திட்டு வழங்குகிறார். இதைப் பார்த்து போலீஸார் அனுமதிக்கின்றனர். இதிலும் சிலர் முறைகேடு செய்வதாகவும், இதனால் கோயில் நிர்வாகத்திற்கு வருமான இழப்பு ஏற்படுவதாகவும், பேரவை உறுப்பினரின் சிபாரிசு செய்யும் கூப்பன் முறையை தடை செய்யவேண்டுமென பாமக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாவட்ட பாமக செயலர் க.தேவமணி தலைமையில் கட்சியினர் சனிக்கிழமை காலை 9 மணியளவில் கோயில் ராஜகோபுரம் முன்பு திரண்டனர். பக்தர்களை தரிசனத்திற்கு உள்ளே செல்லமுடியாத வகையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநள்ளாறு காவல்நிலைய அதிகாரிகள் தேவமணியிடம் பேச்சு நடத்தினர். இதுகுறித்து உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறியதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து க.தேவமணி கூறியது : விரைவு தரிசனத்திற்காக தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா துண்டு சீட்டில் கையொப்பமிட்டு ஆதரவாளர்களிடம் சீட்டை கொடுத்து பக்தர்களை கோயிலுக்கு அனுப்புகிறார். கோயிலுக்கு கிடைக்கக்கூடிய வருமானம், இடைப்பட்டவர்களால் தடுக்கப்படுகிறது. இதில் சிலர் பயனடைகிறார்கள். கோயில் நிர்வாக அதிகாரிக்கே பக்தர்களை சிறப்பு தரிசனத்திற்கும், விரைவு தரிசனத்திற்கும் அனுமதிக்க அதிகாரம் உள்ளது. சிபாரிசு முறையால் கோயிலுக்கான வருமானம் தடைபடுகிறது. இதில் சில கும்பல் பயனடைகிறது. இது தடுக்கப்படாவிட்டால், பாமக தொடர் போராட்டத்தில் ஈடுபடுமென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com