விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்கள் பெயர் பரிந்துரை செய்யப்பட இருப்பதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி்க் குறிப்பு விவரம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டாட்சியரால் சேத்தூர், சுந்தரராஜபுரம், முத்துச்சாமிபுரம், மற்றும் மேலபாட்டம் கரிசல்குளம் ஆகிய கிராமங்களி்ல் உள்ள கிராம உதவியாளர் பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடத்திற்கு கல்வித் தகுதியாக 5-ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் தோல்வி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், 1.1.2014 அன்றைய தேதியில் எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.எ ஆகியோருக்கு 35 வயதிற்குள்ளும், பி.சி, எம்.பி.சி ஆகியோருக்கு 32 வயதிற்குள்ளும், ஓ.சி பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
எனவே மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு அக்குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அசல் சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அட்டை ஆகியவைகளுடன் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகிற 19-ம் தேதி நேரில் வந்து தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும் விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகின்றவர்களின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.