திருச்சுழி அருகே காவல் துறையில் போலீஸ் வேலை வாங்கித் தருவதாக கூறி இளைஞரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த இரண்டு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மஞ்சம்பட்டியை அடுத்த புலியூரான் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் செல்வம்(24). காவல் துறை பணிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தாராம். இதையறிந்த கல்லூரணியைச் சேர்ந்த குரு மற்றும் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரவி ஆகியோர் காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளைஞரை அணுகியுள்ளனர். இதை உண்மையென நம்பி செல்வமும், அவரது தந்தையும் சேர்ந்து கடந்த 21.3.2012 அன்று ரூ.1 லட்சம் ரொக்கம் கொடுத்துள்ளனர். ஆனால், காவல் துறை தேர்வில் செல்வம் தோல்வியடைந்த நிலையில் போலீஸார் வேலையை பெற முடியாது என கூறியுள்ளனர்.
மேலும், பாரதிதாசன் பல்கலைகழகத்தில் இளநிலை உதவியாளர் பணிக்காலியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கு கூடுதலாக ரூ.3 லட்சம் தேவை என தெரிவித்தார்களாம். இதையடுத்து இருவரிடமும் மேற்குறிப்பிட்ட தொகையை கொடுத்துள்ளனர். ஆனால், குறிப்பிட்ட நாள்கள் ஆன நிலையிலும் வேலை வாங்கி தராமல் தாமதம் செய்தார்களாம். பின்னர் தான் ஏமாற்றப்படுவதை அறிந்து கொண்ட செல்வமும், அவரது தந்தையும் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அதற்கு, அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது என தகாத வார்த்தைகள் பேசியும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியும் உள்ளனர்.
இது தொடர்பாக திருச்சுழி காவல் நிலையத்தில் செல்வம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.