

மதுரையில் வெள்ளிக்கிழமை அண்ணன், தம்பி உட்பட 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களில் நெல்லை கூலி படையினருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, மதுரையைச் சேர்ந்த தனிப்படை போலீசார் நெல்லை முன்னீர்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதில், சந்தேகத்துக்கு இடமான சிலரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சகோதரர்கள் உள்பட மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகரைச் சேர்ந்தவர் குண்டுமலை. இவரது மகன்கள் கருப்பு (26), பாம்பு நாகராஜ் (25). கூலி வேலை செய்து வந்தனர். இவர்களது வீட்டுக்கு நாகராஜின் நண்பர் கார்த்திக் (24) வெள்ளிக்கிழமை வந்திருந்தார். மூவரும் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனராம்.
அப்போது, வீட்டுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த 10 பேர் கும்பல் மூவரையும் சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது. அக் கும்பல் தப்பி ஓடிய பிறகே ஒரே நேரத்தில் மூன்று பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அக்கம்பக்கத்தினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.