சிதம்பரம் பகுதியில் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தார் தீவிரவாதி அசரப் அலி
By ஜி.சுந்தர்ராஜன் | Published On : 03rd May 2014 06:55 PM | Last Updated : 03rd May 2014 06:59 PM | அ+அ அ- |

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் கடந்த வியாழக் கிழமை கைது செய்யப்பட்ட குண்டுவெடிப்பு வழக்கு முக்கிய குற்றவாளி அசரப் அலி, மத போதகர்களுடன் சேர்ந்து பல்வேறு பள்ளிவாசல்கள் தங்கியிருந்துள்ளார் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜோத்பூர் லைகன் மோகரா வசிக்கும் ஷபீர்அலி மகன் அசரப்அலி (39). இவர் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதி. அசரப்அலி ஜெய்ப்பூர், புனே, மும்பை, தில்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த முதல் குற்றவாளி. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பள்ளிவாசலில் தீவிரவாதி அசரப்அலியை கடந்த வியாழக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் போலீஸார் செல்போன் டவர் மூலம் அவரது இருப்பிடத்தை அறிந்து வந்து கடலூர் மாவட்ட போலீஸார் உதவியுடன் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
போலீஸாரால் தேடப்பட்டு வந்த அசரப்அலி புதுதில்லியிலிருந்து தமிழகத்திற்கு வந்த மதபோதகர்கள் குழுவினருடன் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிதம்பரம், பின்னத்தூர், லால்பேட்டை, பரங்கிப்பேட்டையில் உள்ள பள்ளிவாசல்களில் கடந்த ஏப்.20-ம் தேதி முதல் தங்கியிருந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அசரப்அலியுடன் பரங்கிப்பேட்டை பள்ளிவாசலில் தங்கியிருந்த 12 மத போதகர்களை போலீஸார் கடலூர் அருகே உள்ள தூக்கனாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் மதபோதகர்களுக்கும், தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பில்லை என உறுதி செய்த போலீஸார் மத போதர்கள் 12 பேரையும் சிதம்பரம் வ.உ.சி தெருவில் உள்ள பள்ளிவாசலில் ஒப்படைத்தனர். இவர்கள் அனைவரும் தில்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும் என போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.