விருதுநகர் அருகே 4 வழிச்சாலை பால தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், விபத்தில் 5 பேர் வரையில் படுகாயம் அடைந்தனர்.
திருநெல்வேலி அருகே வல்லநாடு பகுதியைச் சேர்ந்த ராஜவேல்(27), திருநெல்வேலி நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(30). இவர்கள் கோவையில் தனியார் நூற்பாலையில் பணியாற்றி வருகின்றனர். இருவரும் ஊரில் நடபெறும் திருவிழாவிற்கு செல்வதற்காக கோவையில் பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தார்களாம். அப்போது, கோவில்பட்டியைச் சேர்ந்த சாமுவேல்ராஜ்(30) என்பவர் கோவில்பட்டி வரையில் காரில் செல்வதாக கூறினாராம். ஏற்கனவே திருநெல்வேலிக்கு செல்வதற்காக 3 பேர் இருந்த நிலையில், இவர்களும் ஏறிக்கொண்டனர்.
அப்போது, சூலக்கரையை அடுத்த எட்டுநாயக்கன்பட்டி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலையில் செல்கையில் 4 வழிச்சாலை பால தடுப்புச்சுவரில் எதிர்பாரதவிதமாக மோதியதாம். இதில், திருநெல்வேலி அருகே கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜன்(27) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அந்த காரில் பயணம் செய்த பார்வதிநாதன், வெங்கடேஷ், ராஜவேல், முத்துக்குட்டி மற்றும் கார் ஓட்டுநர் சாமுவேல்ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சூலக்கரை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கும், காயம் அடைந்தவர்களை மீட்டு சாத்தூர் தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சூலக்கரை காவல் நிலையத்தில் பார்வதிநாதன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வாகன ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.