வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் 5 கிலோ கட்டி நீக்கம் செய்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே காடனேரி கிராமத்தைச் சேர்ந்த சோலையன் மனைவி மாடத்தி(40). இவர்கள் விவசாய கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். கடந்த 6 மாதமாக மாடத்தி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். அதைத் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரையும் எடுத்துக் கொண்ட நிலையில் குணமாகவில்லையாம்.
இந்நிலையில், வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக முதல்வர் சிறப்பு காப்பீட்டு திட்ட பிரிவில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அவருக்கு பல்வேறு கட்ட உடல் பரிசோதனை மேற்கொண்டதில் இடது கருமுட்டை பையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது.அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை நடந்த அறுவை சிகிச்சையின் மூலம் 5 கிலோ புற்றுநோய் கட்டியையும் 6 லிட்டர் திரவத்தையும் மருத்துவக்குழுவினர் அகற்றினர். இச்சிகிச்சையை அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பிச்சைக்காளி, மலர்விழி, மயக்கவியல் நிபுணர்கள் ரவி, கலைச்செல்வி மற்றும் செவிலியர் ஜெயந்தி ஆகியோர் மேற்கொண்டனர். மேலும், அகற்றப்பட்ட கட்டியை புற்றுநோய் ஆராய்ச்சிக்காக மதுரை அரசு மருத்துவ கல்லூரியின் திசு பரிசோதனை மையத்திற்கு அனுப்பியும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக்குழுவினரை சுகாதாரத்துறை இணை இயக்குநர் கதிரேசன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். பிரகலாதன் உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.