திருச்செந்தூர் பயணியர் விடுதி சாலையில் பக்தர்கள் வசதிக்காக புறவழிச்சாலை அமைக்க வேண்டுமென பா.ஜ.க. கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து திருச்செந்தூர் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாவட்ட பொதுச்செயலர் பெ.செந்தில்வேலன், பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் ஆர்.டி.செந்தில்வேல், ஒன்றியத்தலைவர்கள் எம்.சிவசெந்தில், நாகராஜ், ஒன்றிய பொதுச்செயலர்கள் இ.தங்கபாண்டி, முத்துக்குமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில்,
திருச்செந்தூர் பயணியர் விடுதி சாலையில் சர்வே. எண். 214-ன் கீழ் 1-ல் 0.20 ஏக்கர் நிலம் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்விடத்திற்கு வடபுறம் கடற்கரை புறம்போக்கு நிலமும், தென்புறம் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலமும் உள்ளது. தனியார் அந்த நிலத்தை திருச்செந்தூர் பேரூராட்சிக்கு தானமாக வழங்கிட ஏற்கனவே சம்மதித்துள்ளார். எனவே மேற்குறிப்பிட்ட 3 இடங்களின் வழியாக வீரபாண்டியன்பட்டணம் ராஜ்கண்ணாநகருக்கு 40 அடி அகலத்தில் புறவழிச்சாலை அமைக்கலாம். இது குறித்து திருச்செந்தூர் பேரூராட்சி கடந்த 21.2.2014 அன்றே தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது. எனவே இங்கு புறவழிச்சாலை அமைவதன் மூலம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வருகைதரும் பாதயாத்திரை பக்தர்கள் மட்டுமில்லாது, திருச்செந்தூர் நீதிமன்றம், பத்திரபதிவுத்துறை அலுவலகம் ஆகியவற்றிற்கு போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் அனைத்து வாகனங்களும் செல்லலாம். ஆனால் அந்த இடத்தில் தொலை நோக்கு பார்வையில்லாமல், காவல்துறை சார்பில் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து, கட்டுமானப்பணியை நிறுத்திட வேண்டும். மேலும் புறவழிச்சாலை அமைவதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.