

விருதுநகரில் வீட்டில் தூங்கிய தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீஸார் புதன்கிழமை விசாரணை செய்தனர்.
விருதுநகரைச் சேர்ந்த, ஒய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி எபினேசர் பால். அவரது மனைவி ஷீலா. இவர்கள் இருவரும் 2005 ஏப்.6 அன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டனர். அவர்களது நகைகள் பறிக்கப்பட்டு இருந்தன. இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரித்து வந்தனர். அதில் எவ்வித முன்னேற்றம் இல்லாத காரணத்தால் கடந்த 2006-ல் சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதுவரையில், கொலையாளிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு எபினேசர் பாலின் மகள் மேரி ஒலிவியா மனுத்தாக்கல் செய்தார். அதை சிபிஐ விசாரிக்கக் கோரும் மனுவுக்கு சிபிசிஐடி எஸ்பி நேரில் ஆஜராகி பதிலளிக்க மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற கிளையில் தென்மண்டல சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் டி.எஸ்.அன்பு ஆஜாரனார்.அதையடுத்து, விருதுநகர் தயாளன் ராஜேஸ் காலனியில் உள்ள எபினேசரின் வீட்டிற்கு சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் டி.எஸ்.அன்பு, துணைக்காவல் கண்காணிப்பாளர் மன்மதபாண்டியன் உள்ளிட்ட போலீஸார் நேரில் விசாரணை செய்ய நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது, அந்த வீடு பூட்டப்பட்டிருந்ததாலும், சாவி கிடைக்காததாலும் முன்புறம் மாடிப்படி வழியாக மொட்டைமாடிக்கு சென்றனர். அங்கு பக்கத்து குடியிருப்பில் உள்ளவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்யும் படி போலீஸாருடன் ஆலோசனை செய்தார்.
இது தொடர்பாக சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், வீடு பூட்டப்பட்டிருந்தது தொடர்பாகவும், சாவி கொண்டு வரும் படியும் பெங்களூருவில் உள்ள எபினேசரின் உறவினர்களிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக மீண்டும் முதலில் இருந்து விவரமாக விசாரணை செய்ய இருப்பதாக மட்டும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.