பழனி அடிவாரம் வடக்கு கிரிவீதியில் திருக்கோயில் சார்பில் போடப்பட்டுள்ள நிழற்பந்தலுக்கு பல்வேறு அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளது.
பழனியில் தற்போது தைப்பூசம், பங்குனி உத்திரம் நிறைவு பெற்ற நிலையிலும் பக்தர்கள் கூட்டம் அளவின்றி காணப்படுகிறது. தற்போது கோடைவிடுமுறை துவங்கி விட்டதால் ஏராளமானோர் பழனிக்கு கொடுமுடி தீர்த்தக்காவடி எடுத்து வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் வசதிக்காக திருக்கோயில் நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. பழனி மலைக்கோயிலுக்கு நகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வரும் குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு வினியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையிலும் திருக்கோயில் நிர்வாகம் கிரிவீதியில் உள்ள குளம் மற்றும் போர்வெல் மூலமாக தடையின்றி குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.
மலைக்கோயிலில் மேல்தளத்தில் கோடைகாலம் என்பதால் பக்தர்கள் நலன்கருதி பிரகாரங்களில் விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தது. ஆனால் பக்தர்கள் கூட்டத்துக்கு அது போதாததாக இருந்ததால் மலைக்கோயிலில் தகரசீட்டுகளால் பந்தல் போடப்பட்டது. இதனால் பக்தர்கள் வின்ச் மற்றும் ரோப்காரில் இருந்து வெளியே வந்து கோயிலுக்கு செல்லும் வரையிலும் வெயிலின் தாக்கம் பக்தர்களை பாதிக்காதவண்ணம் உள்ளது. இந்நிலையில் மலைக்கோயிலில் பக்தர்கள் அதிக அளவு செல்லும் வடக்குகிரிவீதியில் வெயிலால் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அவதிப்படுவதால் இங்கும் பந்தல் அமைக்க பல்வேறு ஆன்மீக அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம் உத்திரவின் பேரில் அடிவாரம் அருள்மிகு பாதவினாயகர் கோயிலில் இருந்து குடமுழுக்கு நினைவரங்கம் வரையிலும் தகரசீட்டுகளால் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆன்மீக அமைப்புகள் மட்டுமன்றி பல்வேறு பொது அமைப்புகளும் திருக்கோயில் நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளது. மேற்படி நிழற்பந்தலில் வெயில் காலங்களில் வண்டிகளில் வியாபாரம் செய்வோர் அதிக அளவு ஆக்கிரமிப்பு செய்வதால் பக்தர்கள் நடப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதற்கு மட்டும் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.