விஷூ திருநாள்: காரைக்கால் ஐயப்பன் கோயிலில் காய், கனிகளுடன் பக்தர்கள் வழிபாடு

மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடும் விஷூ திருநாளையொட்டி புதன்கிழமை, காரைக்கால் ஐய்யப்பன் கோயிலில் காய், கனிகள், மலர்கள் வைத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
Updated on
1 min read

மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடும் விஷூ திருநாளையொட்டி புதன்கிழமை, காரைக்கால் ஐய்யப்பன் கோயிலில் காய், கனிகள், மலர்கள் வைத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

மலையாளப் புத்தாண்டு என்னும் விஷூ திருநாளையொட்டி, மலையாள மொழிப் பேசும் மக்கள் தங்களது இல்லங்களில் பாரம்பரியப்படி அரிசி, காய், கனிகள், மலர், கண்ணாடி, கொன்றை மலர், நாணயங்கள் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். இளைஞர்களும், சிறுவர்களும் பெரியோர்களிடம் ஆசி பெறுகின்றனர்.  கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை, குருவாயூர் போன்ற பிரசித்திப்பெற்ற கோயில்களில் விஷூ கனி மற்றும் கை நீட்டம் என்கிற இரு வைபவங்கள் விமரிசையாக இந்நாளில் கொண்டாடப்படுகிறது.

காரைக்காலில் கடந்த மாதம் புதிதாக ஐய்யப்பன் கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. இக்கோயிலில் புதன்கிழமை காலை 4.30 மணிக்கு ஐய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி, சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. சன்னதிக்கு முன்பாக ஏராளமான காய், கனிகள் வைத்து மலர் பந்தல் போடப்பட்டிருந்தது. சன்னதிக்கு எதிரே கண்ணாடி வைக்கப்பட்டு, ஐய்யப்பனை கண்ணாடியிóன் வழியே தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை முதல் காரைக்காலில் வசிக்கும் மலையாள மக்கள், சபரி மலைக்கு செல்வதை வழக்கத்தில் கொண்டிருக்கும் ஐய்யப்ப பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

வழிபாடு செய்யவந்த பக்தர்களுக்கு கோயில் மேல்சாந்தியானவர் மலர் மற்றும் நாணயத்தை வழங்கினார். இதனை வீட்டுக்கு கொண்டு சென்று வைத்து பூஜிக்கும்போது, செல்வம் பெருகி, சகலவித மேம்பாடு கிடைக்குமென்பது நம்பிக்கை. காரைக்காலில் முதல் முறையாக இவ்விழா நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை தர்மசாஸ்தா அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com