
ஆலங்குளம் மலைப்பகுதியில் மான் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது போன்ற தொடரும் சம்பவங்களைத் தவிர்க்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குளம் மலை ராமர் கோயில் பகுதி தமிழ்நாடு வனத்துறையால் பாதுகாக்கபட்ட பகுதியாக அறிவிக்கபட்டுள்ளது. இங்கு ஏராளமான மான்கள், மயில்கள் உள்ளன. இதில் இரவு நேரங்களில் மான்கள் இரை தேடியும், தண்ணீர் தேடியும் மலை அடிவார பகுதியில் உள்ள வயல்வெளிக்குள் இறங்கி விவசாயிகள் பயிரிட்ட காய்கனிகளைத் தின்று சேதப்படுத்தி விடுகின்றன.
இதனால் விவசாயிகள் கடுமையான நட்டத்தை சந்தித்து வருகின்றனர். வன விலங்குகளைத் தொந்தரவு செய்தால் வனத்துறையினர் எடுக்கும் நடவடிக்கைக்கு அஞ்சி அவற்றை எதுவும் செய்ய இயலாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் விவசாயிகள். இது குறித்து வனத்துறையினருக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மான்கள் சில வேளைகளில் இரை தேடி பிரதான சாலைக்கு வரும் போது வாகனங்களில் அடி பட்டு இறப்பதும் இப்பகுதியில் அடிக்கடி நடக்கிறது.
இந்நிலையில் செவ்வாய்கிழமை அதிகாலை ஆலங்குளம் மலை ராமர் கோயில் அருகே தென்காசி சாலை ஓரம் 5 வயதுடைய ஆண் மான் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. மானின் கால் பகுதியில் கல்லால் எரிந்தது போன்ற காயமும், வாய் பகுதியில் சிறிது ரத்ததுடனும் அந்த மான் கிடந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மான் பாம்பு கடித்து இறந்ததாக தெரிவித்தனர். ஆனால் பாம்பு கடித்து இறந்த சுவடு ஏதும் தென்படாததால் மான் வேட்டையாட பட்டதா அல்லது பாம்பு கடித்து இறந்ததா என கால்நடை மருத்துவர் பரிசோதனைக்கு பின்பு தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.