விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சி பிரிவு வளாகங்களில் கழிப்பறைகளில் போதிய தண்ணீர் வசதியி்ல்லாததால் துர்நாற்றம் ஏற்படுகிறது. அதோடு, இந்த அலுவலகங்களில் பணியாற்றும் பெண் அலுவலர்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம், ஊரக வளர்ச்சி துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. அதேபோல் சி பிரிவு வளாகத்தில் மூன்று தளங்கள் உள்ளன. இதில், சுகாதார துறை அலுவலகம், புதுவாழ்வு திட்டம், புள்ளியியல் துறை அலுவலகம், கூட்டுறவு துறை, கைத்தறி துறை, கல்வித் துறை, மாவட்ட உடற்கல்வி அலுவலர் அலுவலகம், குடும்ப கட்டுப்பாடு அலுவலகம் உள்ளிட்ட 11 துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் 400-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அதில், பெண் அமைச்சுப் பணியாளர்கள் அதிகமாக பணியாற்றுகின்றனர்.
இந்த அலுவலகங்களில் ஆண், பெண் பணியாளர்களுக்கான சுகாதார வளாகங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல், சாப்பிட்ட பாத்திரங்களைக் சுத்தப்படுத்துவதற்கு கூட முடியாத நிலையில் பக்கத்து அலுவலக வளாகங்களுக்கு சென்று வரும் சூழ்நிலை இருக்கிறது. இந்த வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து ஒவ்வொரு வளாகங்களுக்கும் ஏற்றும் மோட்டார் பழுதாகி போய்விடுவதாலும், அதேபோல் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மேலே தண்ணீர் ஏற்ற முடியாத நிலையிருக்கிறது. எனவே சரிசெய்யப்படாத காரணத்தால் தண்ணீர் வரவில்லை. இதனால், சுகாதார வளாகங்களை பயன்படுத்திவிட்டு தண்ணீர் ஊற்றமால் வருவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுவதாக அலுவலர்கள் புகார் தெரிவி்க்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் கண்ணன் கூறுகையில், இது தொடர்பாக பொதுப்பணித்துறைக்கு அலுவலர்கள் சங்கம் சார்பிலும், பெண் பணியாளர்கள் சங்கம் சார்பிலும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் எந்நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். இதனால், ஒவ்வொரு வளாகங்களிளும் நடுப்பகுதியில் சுகாதார வளாகங்கள் இருப்பதால், அதன் அருகில் உள்ள துறைகளில் உள்ள பணியாளர்கள் பணியாற்ற முடியாத அளவிற்கு துர்நாற்றம் ஏற்படுகிறது. அதனால், விரைவில் பொதுப்பணித்துறையினர் கால தாமாதம் செய்யாமல் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் ஏற்றும் மோட்டார், குழாயை சரி செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.