

விருதுநகரில் கோடையில் கொளுத்தி வரும் கோடை வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக பொதுமக்கள் குளிர்ச்சியான பொருள்களை விரும்புவதால் நொங்கு மற்றும் பதநீர் வியாபாரம் மும்முரமாக நடந்து வருகிறது.
விருதுநகர் பகுதியில் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் பகலில் வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகின்றனர். மேலும், கோடை வெப்பத்தை தனிப்பதற்காக பொதுமக்கள் குளிர்ச்சியான பொருள்களின் மீது திரும்பியுள்ளது. தற்போது, நகரில் தண்ணீர் பழம், வெள்ளரிக்காய், வெள்ளரி பழம், பதநீர், நொங்கு, இளநீர் உள்ளிட்ட பொருள்களை ஆர்வத்துடன் வாங்கி செலவதும் அதிகரித்துள்ளது. எனவே நகருக்குள் உள்ளே இருந்தால் நெருக்கடி அதிகமாக இருப்பதால், வெளிப்பகுதியில் கடை விரித்துள்ளனர்.
இப்பகுதியில் விருதுநகர்- கச்சேரி சாலை, விருதுநகர்-சிவகாசி சாலை, ஆட்சியர் அலுவலக சாலை, சூலக்கரை, புதுப்பேருந்து நிலையம், அருப்புக்கோட்டை சாலைப் பகுதிகளில் மரத்தடி நிழல்களில் புற்றீசல் போல் பதநீர் மற்றும் நொங்கு வியாபாரத்திற்கு தற்காலிகமாக கடை விரித்துள்ளனர். எனவே ஒதுக்கு புற பகுதியில் உள்ளதால் வாகனங்களில் வருகிறவர்கள் பதநீர் மற்றும் இளம் பனை நொங்குகளையும் விலை அதிகமாக இருந்தாலும் ஆர்வத்துடன் அருந்தி வெப்பத்தை தனித்துக் கொள்கின்றனர். ஒரு கப் பதநீர் ரூ.15 முதல் ரூ.20 வரையில் நேரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், உடைத்த 2 பனை நொங்குகள் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும், தண்ணீருடன் உள்ள நொங்கு அதிகமாகவே விற்பனை செய்கின்றனர். பனை பொருள்கள் என்பது கோடைக்கால சீசனில் மட்டுமே கிடைக்கும் என்பதால், விலை அதிகமாக இருந்த போதிலும் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.
இது குறித்து பனை பொருள் வியாபாரி தங்கரத்தினம் என்பவர் கூறுகையில், இப்பகுதியில் கடும் வெயில் அடித்து வருவதால், உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் நொங்கு மற்றும் பதநீர் உள்ளிட்டவைகளையே விரும்பி அருந்துகிறார்கள். சொந்தமாக பனை வைத்திருப்பவர்கள் இப்பொருள்களை குறைத்து விற்பனை செய்கின்றனர். அதேபோல், ஓண்டிப்புலிநாயக்கனூர், தாதம்பட்டி, ஓடைப்பட்டி, முத்துலாபுரம், சாத்தூர், இருக்கன்குடி, பாலவநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் குத்தகை எடுத்தவர்களிடம் இருந்துதான் பதநீர் மற்றும் நொங்குகளை வாங்கி வந்து விற்பனை செய்கின்றோம். எனவே கடினமான வெயிலையும் சாமளித்து வியாபாரம் செய்தால் ஒரு நாளைக்கு போட்ட முதலுடன் கூலியாக ரூ.300 முதல் 400 வரையில் கிடைக்கும். அதிலும், கத்திரி வெயில் காலத்தில் மட்டும் பனைப் பொருள்கள் அதிகமாக விற்பனையாகும் என அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.