விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் சுங்க வரிச்செலுத்தாமல் இரவு நேரங்களில் குறுக்கு வழியில் சென்று நெடுஞ்சாலை அடையும் வாகனங்களினால் ஏற்படும் தூசி மற்றும் இரைச்சல் போன்றவைகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எட்டூர்வட்டம் கிராம மக்கள் ஆட்சியர் வே.ராஜாராமனிடம் நேரில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
விருதுநகர்-சாத்தூர் 4 வழிச்சாலையின் மீது அமைந்துள்ளது இ.முத்துலிங்காபுரம் ஊராட்சியைச் சேர்ந்த எட்டூர்வட்டம். இக்கிராமத்தில் மொத்தம் 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமம் அருகே சுங்கச்சாவடியும் அமைந்துள்ளது. இச்சாவடி மூலம் இச்சாலையில் செல்லும் வாகனங்களிடம் இருந்து வரி வசூலும் செய்யப்படுகிறது.
இந்த வரியைச் செலுத்தாமல் தவிர்க்கும் வகையில் தனியார் வாகனங்கள் எட்டூர்வட்டம் கிராமத்திற்குள் ஓய்வு எடுப்பது போல் வந்து சாத்தூர்-சிவகாசி சாலை வழியாக செல்கின்றனர். ஏற்கனவே குண்டும், குழியுமாக உள்ள சாலையில் உயரமான வாகனங்களில் குளிர்பானம், இருசக்கர வாகனம், கார்களை ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் 20 டன்னுக்கு மேல் சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள் செல்வதற்காக சாலையோரத்தில் இடையூராக உள்ள மின்கம்பங்களின் வயர் இணைப்பையும் துண்டித்து விடுகின்றனர். இதனால், பெரும்பாலன நேரங்களில் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட வேண்டியுள்ளது. அதோடு, பொதுமக்களுக்கு முக்கிய தேவையான குடிநீருக்காக பம்ப்களையும் இயக்க முடியாத நிலையேற்படுகிறது.
எனவே இச்சாலையை அதிகமான வாகனங்கள் கடந்து செல்வதால் தூசியும், இரைச்சலால் குழந்தைகள் பெரியோர்கள் ஆகியோர் தூங்க முடியாமல் உடல் நிலையும் பாதிக்கும் நிலையும் ஏற்படுகிறது. அதேபோல், பெண்களும் இரவு நேரங்களில் கழிப்பிட வசதிக்காக ஒதுங்க முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது. எனவே சுங்க வரிக் கொடுப்பதிலிருந்து தப்புவதற்காகவே வாகனங்கள் குறுக்கு வழியில் செல்கின்றன. அதனால், இதுபோன்ற வாகனங்களை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.