விருதுநகர் மாவட்டப் பகுதியில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் விளைநிலங்களில் செயல்படுத்தப்படும் பணிகளை அதிகாரிகளுடன் ஆட்சியர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தில், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார பகுதிகளில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் விவசாயிகளுக்கு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தொடர்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.அதில், எரிச்சநத்தம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் வேளாண்மை துறையின் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க அலுவலர்கள் குழு சார்ந்த நிரந்தர பயணத்திட்டத்தை ஆட்சியர் வே.ராஜாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் அதிக மகசூல் பெறும் வகையிலான பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதற்காக கிராமங்களில் விவசாயிகள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, நாள்தோறும் வேளாண்மை அலுவலர்கள் வயலுக்கு சென்று பயிர்களை பார்வையிட்டு ஆலோசனை வழங்கும் வகையில் நிரந்தர பயணத்திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதோடு, வேளாண்மை உதவி செயல் அலுவலர்களின் செயல் திட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, துவரை உள்ளிட்ட பயிர்களை பார்வையிட்டார். அதையடுத்து, இப்பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் க.சுப்பையா, வேளாண்மை துணை இயக்குநர் பழனிச்செல்வம், வேளாண்மை உதவி இயக்குநர்கள் பத்மாவதி, முத்துப்பாண்டி உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.