ராஜபாளையம் அருகே தலைவர், செயலாளர் மீது துப்புரவு பணியாளர்கள் புகார்

ராஜபாளையம் அருகே கிராம ஊராட்சியில் துப்புரவு பணிகளில் சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி வருவதாகவும், தரக்குறைவாக பேசுவதாகவும் நடத்தும் தலைவர் மற்றும் செயலாளர்
Updated on
1 min read

ராஜபாளையம் அருகே கிராம ஊராட்சியில் துப்புரவு பணிகளில் சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி வருவதாகவும், தரக்குறைவாக பேசுவதாகவும் நடத்தும் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என துப்புரவு பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து எஸ்.ராமலிங்காபுரம் கிராம ஊராட்சியைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் ஆட்சியர் வே.ராஜாராமனிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ளது எஸ்.ராமலிங்காபுரம் கிராமம். இக்கிராம ஊராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை தலைவரும், செயலாளரும் தரக்குறைவாக பேசி வருகின்றனர். உடல் நிலை சரியில்லாத நேரத்தில் மருத்துவச்சிகிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலையுள்ளது. அப்போது துப்புரவு பணியாளர்களின் வாரிசுகளான 15 வயதுக்குள்பட்ட சிறுவர்களை கட்டாயப்படுத்தி துப்புரவு பணிகளில் ஈடுபட வைக்கின்றனர். இதனால், அவர்களின் பள்ளி படிப்பும் பாதிக்கப்படுகிறது.

இந்த ஊராட்சியில் பணியாற்றி வந்த துப்புரவு பணியாளர் வெள்ளையம்மாள், சின்னத்தம்பி ஆகியோரை தரக்குறைவாக பேசி, எக்காரணமும் இல்லாமல் பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும், இதுவரையில் இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும், சிற்ப்பு காலமுறை ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டு ஓராண்டாகியும் இதுவரையில் ரூ.3415 வழங்காமல், ரூ.3040 மட்டுமே வழங்குகின்றனர். அதேபோல் அகவிலைப்படியும் கடந்த 5 ஆண்டுகளாகவும்,  இப்பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் கடந்த 3 ஆண்டுகளாகவும்  வழங்கவில்லை.

இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் குறைகள் தெரிவித்தால் அப்பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்காமல் தாமதம் செய்கின்றனர். எனவே மனித உரிமையை மீறி செயல்படும் ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்திலும், இப்பணி செய்கிறவர்களை தரக்குறைவாக நடத்தும் இவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் வே.ராஜாராமனிடம் நேரில் அளித்த மனுவில் துப்புரவு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com