விருதுநகரில் பூட்டிய வீட்டிற்குள் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருப்பம்

விருதுநகர் அருகே பூட்டிய வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் உயிருடன் திரும்பி வந்ததால், கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கணவர் அடுத்தவரின் மனைவியை கொலை
Updated on
1 min read

விருதுநகர் அருகே பூட்டிய வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் உயிருடன் திரும்பி வந்ததால், கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கணவர் அடுத்தவரின் மனைவியை கொலை செய்திருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்ததால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மேலரத வீதியில் அண்ணாமலை செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ரெங்கராஜ்(28). இவர் பிளக்ஸ் போர்டு, சுவரொட்டிகள் ஒட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கோமதி(25), இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் 1 பெண்குழந்தையும் உள்ளது. இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்படுமாம். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி இரவு கோமதியை கொலை செய்து சாக்கு பையில் வைத்திருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததை தொடர்ந்து மேற்கு காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றினர்.அதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை செய்ததில் தனது மனைவியின் நடத்தை சரியில்லாத காரணத்தால், 3 நாள்களுக்கு முன்பு கொலை செய்து சாக்கு பையில் கட்டி வைத்திருந்ததாக போலீஸாரிடம் ரெங்கராஜ் கூறியதை அடுத்து கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கொலை செய்ததாக கூறப்பட்ட கோமதி, உயிருடன் இருப்பதாகவும், திண்டுக்கல்லில் உறவினர் வீட்டில் தங்கியிப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சாக்கு பையில் இருந்தது யாருடைய சடலம் என விசாரிக்கையில் விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கணேசன் மனைவி செல்வி(42) என தெரியவந்தது. இதை சடலத்திலிருந்த ஆடை, ஆபரணங்கள் ஆகியவைகளை பார்த்து தனது தாயிக்குரியது என 2 மகள்களும், 1 மகனும் அடையாளம் கூறி உள்ளனர். ஏற்கனவே செல்வி காணாமல் போனதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சிறைக்குள் இருக்கும் ரெங்கராஜியிடம் விசாரணை செய்தால் தான் கொலைக்கான முழு விவரமும் தெரியவரும் என மேற்கு காவல் நிலைய போலீஸார் தெரிவித்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com