"ஃபேஸ்புக்' மூலம் காதல் செய்து தன்னிடம் ஒரு பெண் பணம் மோசடி செய்ததாக சென்னை ஆணழகன் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கடந்த 2009ம் ஆண்டு சென்னை ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டவர். தற்போது உடற்பயிற்சி மையம் நடத்தி வரும் கார்த்திகேயன், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
ஃபேஸ்புக் மூலம் கடந்த 2013ம் ஆண்டு திருப்பூர் வேலம்பாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருந்த அந்தப் பெண், அப்போது பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.நாங்கள் நெருக்கமாக பழகியதால், விரைவில் காதலிக்கத் தொடங்கினோம். இந்நிலையில் அவருக்கு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால், அங்கிருந்து இங்கு வந்தார். இங்கு விடுதியில் தங்கியிருந்தால், அந்த பெண் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். இதனால் எங்கள் குடும்பத்தினருக்கும் அந்த பெண்ணைப் பிடித்தது.
ஆனால் அவரது வீட்டில் காதலை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என அந்தப் பெண் கூறியதால், நானும், அந்தப் பெண்ணும் போரூரில் உள்ள கோயிலில் ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டோம். அதன் பின்னர் நாங்கள் கணவர்-மனைவிபோல வாழ்ந்து வந்தோம்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பொங்கலையொட்டி, சொந்த ஊருக்குச் சென்ற அந்தப் பெண் அதன் திரும்பி வரவில்லை. அவரை செல்லிடபேசி மூலம் என்னால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அண்மையில் தொடர்பு கொண்ட அந்தப் பெண், தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாகவும், என்னைப் பிடிக்கவில்லை என்றும் கூறிவிட்டார்.
இது தொடர்பாக அவரைச் சந்திக்க அந்த பெண்ணின் சொந்த ஊருக்குச் சென்றபோது, அவரது குடும்பத்தினர் என்னை மிரட்டி அனுப்பிவிட்டனர். என்னைக் காதலிப்பதாக கூறி அந்த பெண் பல லட்சம் மோசடி செய்துள்ளார். இப்போது வேறு 3 இளைஞர்களையும் தனது வலையில் விழ வைப்பதற்காக அந்தப் பெண் முயற்சித்து வருகிறார். எனவே, போலீஸார் அந்தப் பெண் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.