விருதுநகரில் திருப்பத்தை ஏற்படுத்திய பெண் கொலை வழக்கில், உயிருடன் வந்த கொலையாளியின் மனைவியை ஸ்ரீவில்லிபுத்தூர் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் போலீஸார் புதன்கிழமை ஆஜார்படுத்தினர்.
விருதுநகர் மேலரத வீதியில் அண்ணாமலை செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ரெங்கராஜ்(28). இவர் கடந்த 2-ம் தேதி மனைவி கோமதியை(25) கொலை செய்து சாக்குப் பையில் வைத்திருந்ததாக ரெங்கராஜையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஆறுமுகத்தையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக உயர் அதிகாரிகள் மறுவிசாரணை நடத்த உத்தரவிட்டனர். அதில், கோமதி 3 ஆண்டுகளுக்கு முன்பே ரெங்கராஜிடம் இருந்து பிரிந்து குழந்தையுடன் திண்டுக்கல் மாவட்டம், சித்தாளம்பட்டியில் உறவினர் வீட்டில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.இதைத் தொடர்ந்து சாக்குப்பையில் சடலமாக கிடந்த பெண் யார் என விசாரித்தனர். இதில், பாண்டியன் நகரைச் சேர்ந்த கணேசன் மனைவி செல்வி(42) என உறுதிசெய்யப்படாத தகவல் கிடைத்தது. பின்னர் சடலத்திலிருந்து கைப்பற்றிய உடைகள், ஆபரணங்கள் மூலம் அப்பெண்ணின் குழந்தைகள் அடையாளம் காட்டியுள்ளனர். அவர் காணாமல் போயிருப்பதாகவும் பாண்டியன்நகர் காவல் நிலையத்தில் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கொலை சம்பவம் தொடர்பாக ரெங்கராஜனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்ததில் செல்வியை கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இதில், காவல் நிலையத்தில் கோமதி கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதன் அடிப்படையில் விருதுநகர் நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதியின் முன்பு கோமதியை ஆஜார்படுத்தி வாக்கு மூலம் பெறுவதற்காக செவ்வாய்கிழமை போலீஸார் மனுதாக்கல் அளித்திருந்தனர். இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நீதிபதி பத்மா முன்னிலையில் கோமதியை புதன்கிழமை போலீஸார் ஆஜார்படுத்தினர். அங்கு 164-சட்டப்பிரிவு அடிப்படையில் உயிருடன் இருப்பதற்கான ரகசிய வாக்கு மூலத்தை அவர் நீதிபதியின் முன்பு அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.