விருதுநகர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டப்பணிகளை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆட்சியர் வே.ராஜாராமன் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் வறுமையை ஒழிக்கும் வகையில் வத்திராயிருப்பு, நரிக்குடி, வெம்பக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதி கிராமங்களில் புதுவாழ்வு திட்டம் மூலம் வறுமை ஒழிப்புச் சங்கங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்பணிகள் செயல்படுவதை நேரில் அறிந்து கொள்ளும் வகையில் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் கிராமங்களில் புதுவாழ்வு திட்ட அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அதில், லட்சுமியாபுரம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் மகளிர் வறுமை ஒழிப்புச் சங்கத்தின் 33 குழுக்களை சந்தித்தார். அவர்களிடம் திட்டம் பயனுள்ளதாக இருக்கிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், ஒவ்வொரு குழுவுக்கும் வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தியதால் உங்கள் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதா எனவும் கேட்டறிந்தார்.
மேலும், இக்குழுக்கள் எந்த தொழில் செய்ய விரும்புகிறார்களோ அதன் அடிப்படையி்ல உடனடியாக பயிற்சி கொடுக்க புதுவாழ்வு திட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அதையடுத்து, இக்குழுவினர் கிராமங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ளும் வகையில் சுகாதார வளாகங்களை பயன்படுத்தவும், பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் விழிப்புணர்வோடு இருக்கவும் என வறுமை ஒழிப்புச் சங்கங்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாநில ஊரக வாழ்வாதார திட்ட அலுவலர் பிச்சை, புதுவாழ்வு திட்ட மேலாளர் சண்முகராஜ், உதவி திட்ட மேலாளர் கோகுலன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாய்ஸ், ஊராட்சி தலைவர் கே.நடராஜன் உள்ளிட்டோர் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை புதுவாழ்வு திட்ட களப்பணியாளர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.