விருதுநகரில் தைப்பொங்கல் வியாபாரம் மும்முரம்: செங்கரும்பு விலை அதிகம்

விருதுநகர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தைப்பொங்கலுக்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்காக பஜார் பகுதியில் குவிந்து வருகின்றனர்.  இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து
Updated on
1 min read

விருதுநகர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தைப்பொங்கலுக்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்காக பஜார் பகுதியில் குவிந்து வருகின்றனர்.  இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் கண்காணிக்கும் வகையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழாவை நகரம் முதல் கிராமங்கள் வரையில் உள்ளவர்கள் சிறப்பாக கொண்டாடுவர். இத்திருவிழா வியாழக்கிழமை தொடங்கி, சனிக்கிழமை வரையில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு புது மணத்தம்பதிகளுக்கு சீர்வரிசை பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வாங்குவதற்காக கிராமங்களில் இருந்து பெற்றோர்கள் குவிந்து வருகின்றனர். இவ்விழா பொருள்களான செங்கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள் கிழங்கு கொத்து, தேங்காய், வாழைப்பழம், பூமாலைகள், மண்பாண்டம் மற்றும் பலசரக்குகள் விற்பனை செய்யும் இடங்களில் கூட்டம் அலைமோதுவதால் வியாபாரமும் மும்முரமாக நடந்து வருகிறது. அதேபோல், தை மாதச் சீர்வரிசை பொருள்கள் வழங்குவதற்காக பெற்றோர்களுடன் புதுமணத் தம்பதிகளும் ஜவுளிக்கடைகளில் குவிந்து வருகின்றனர்.

இது தொடர்பாக குந்தலப்பட்டியைச் சேர்ந்த கோவிந்தநாதன் என்பவர் கூறுகையில், செங்கரும்பு, பூமாலைகள், தேங்காய், வாழைத்தார் உள்ளிட்டவைகளின் விலை உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் நடையனேரி, எரிச்சநத்தம், கோபிநாயக்கன்பட்டி, செங்கமலநாச்சியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செங்கரும்பு பயிரிடப்பட்டு விற்பனைக்கு வரும். அப்போது, விலை குறைவாகவும் கிடைத்தது. ஆனால், பயிரிடும் பருவத்தில் போதிய மழை பெய்யாத காரணத்தால் பயிரிடவில்லை. அதேபோல் மஞ்சள் கிழங்கு கொத்தின் விலையும் ரூ.20 லிருந்து ரூ.40 ஆக உயர்திருப்பதாக தெரிவித்தார்.

விருதுநகர் கரும்பு வியாபாரி காரிச்சாமி கூறுகையில், விருதுநகர் பகுதியில் இம்முறை செங்கரும்பு பயிரிடப்படவில்லை. அதனால், இம்முறை தேனி மாவட்டம் சின்னமனூர், உத்தமபாளையம் மற்றும் மேலூர் பகுதிகளில் இருந்து செங்கரும்பு வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். அதனால், கரும்பு வெட்டு, ஏற்றுக் கூலி மற்றும் லாரி வாடகை கொடுத்து வாங்கி வந்து வந்து விற்கிறோம். தற்போது, வளர்ந்த நிலையில் 15 தட்டைகள் கொண்ட செங்கரும்பு கட்டின் ரூ.400 முதல் ரூ.450 வரையில் விற்பனை செய்கின்றனர். இதேபோல், கடந்தாண்டு ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.350 வரையில் விற்பனையானதாக தெரிவித்தார். 

ஜேப்படி திருடர்களை கண்காணிக்க கேமரா: தைப்பொங்கல் பொருள்கள் வாங்க வரும் கிராம மக்கள் பஜார் பகுதிகளில் குவிந்து வருகின்றனர். இதை தங்களுக்கு ஜாதகமாக பயன்படுத்தி ஜேப்படி திருடர்கள் பிக்பாக்கெட் அடிப்பதை கண்காணிப்பதற்காக மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், தேசபந்து மைதானம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் துல்லியமாக கண்காணிக்கும் வகையிலான கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. அதோடு, ஒலி பெருக்கி மூலம் அவ்வப்போது பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com