விருதுநகர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல் நெருக்கடியில் தினறும் கிராம ஊராட்சிகள்: நிதி ஒதுக்கீடு செய்ய அரசு முன்வருமா?

விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல் நிதி நெருக்கடியால் கிராம ஊராட்சி நிர்வாகங்கள் சிரமப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கழிவு நீர் சுத்தம்
Updated on
2 min read

விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல் நிதி நெருக்கடியால் கிராம ஊராட்சி நிர்வாகங்கள் சிரமப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கழிவு நீர் சுத்தம் உள்பட பல்வேறு பணிகளைச் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில் தலைவர்கள் செய்ய முடியாத நிலையில் சிரமத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 450 கிராம ஊராட்சிள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் ஒவ்வொரு நாளும் கழிவு வாய்க்கால் சுத்தம் செய்தல், மக்கும், மக்காத குப்பைகளை அகற்றுதல், ஒவ்வொரு தெருவிற்கும் கொசுவை ஒழிக்கும் வகையில் மருந்தும் தெளிக்கப்படுகிறது. இப்பணி அனைத்தும் வீட்டு வரி, தொழிற்சாலைகள் உரிமக்கட்டணம், தொழில்வரி, கண்மாய் ஏலம் விடுதல், மரங்கள் ஏலம் விடுதல் உள்ளிட்டவை மூலம் வருவாய் கிடைக்கும். அதிலும், தொழில் வரி மற்றும் தொழிற்சாலை உரிமக்கட்டணங்கள் யாரும் செலுத்துவது இல்லை.

மாநில நிதிக்குழு மானியம் மூலம் 70 சதவீதம் குறிப்பிட்ட அளவு நிதி கிடைத்து வந்தது. அதில், சாலைப்பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மின் கட்டணம் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் ஆகியவைகள் வழங்க முடிந்தது. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே 70 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக நிதி குறைந்தது. இதனால், கிராமங்களில் எவ்விதமான அடிப்படை பணிகளும் மேற்கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது.

தற்போது, டெங்கு காய்ச்சல் பரவாமல் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கழிவு நீர் வாய்க்கால்,  குப்பைகளையும் அகற்றவும் எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யாமல் 4 நாள்களுக்குள் அகற்ற ஊராட்சிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார். இப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனால் எப்படி மேற்கொள்வது என்பது தெரியாமல் நெருக்கடியில் உள்ளதாக ஊராட்சி தலைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் கூறுகையில், தற்போது கிராமங்களில் டெங்கு பரவாமல் தடுக்கும் வகையில் குறிப்பிட்ட நாள்களுக்குள் பணிகள் மேற்கொள்ள அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கிராமங்களில் குப்பை அகற்றுதல், கழிவு நீர் வாய்க்கால் தூர்வாறுதல், ஒவ்வொரு தெருவில் உள்ள வீடுகள் தோறும், நிலவேம்பு கசாயம், பிளீச்சிங் பவுடர் மற்றும் தண்ணீர் தொட்டியில் கொசு மருந்து தெளிக்கும் படியும் கூறியுள்ளனர். ஆனால், இப்பணிகள் மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு குறித்து கேட்டால், முதலில் எப்படியாவது செய்யுங்க பார்க்கலாம் என்கின்றனர். ஏற்கனவே ஒவ்வொரு ஊராட்சிக்கும் வழங்கப்படும் மாநில நிதிக்குழு மானிய ஒதுக்கீடு குறைந்து கொண்டே வருகிறது. இதற்கிடையே அடிப்படை வசதி செய்து கொடுக்கும் படி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சட்டஒழுங்கு பிரச்னையையும் ஏற்படுத்துகின்றனர். இதனால் வருவாய் இல்லாத கிராமங்களில் சிரமப்பட்டு நி்ர்வாகம் செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பீபிஜான் என்பவர் கூறுகையில்,  கிராம ஊராட்சி நிதியில் இருந்து தான் கழிவு நீர் வாய்க்கால், குப்பைகள் அள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக எந்த திட்டத்திலும் நிதி ஒதுக்கப்படவில்லை. மேலும், இப்பணியை 4 நாள்களுக்குள் முடித்து அதிகாரிகள் மேற்பார்வையிடவும் உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com