விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஊழியரின் கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையைச் பறித்துக் கொண்டு தப்பியோட முயற்சித்தவரை அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து சூலக்கரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
சாத்தூரை அடுத்த அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிராஜின் மனைவி உமா(30). இவர் விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகத்தில் கணிப்பொறி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் புதன்கிழமை காலையில் 10 மணிக்கு நீதிமன்ற பணி செய்வதற்காக வளாகத்திற்கு முன்பு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பின்புறமாக வந்த ஒருவர் திடீரென கண் இமைக்கும் நேரத்தில் உமாவின் கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையைச் பறிக்க முயற்சிக்கையில் உமாவும் விடாமல் போராடினாராம். அதோடு, உடனே அப்பகுதியில் இருந்தவர்களை சத்தம் போட்டு உதவிக்கு அழைத்தார். அதற்குள், நகையை பறித்துக் கொண்டு தப்பியோட முயற்சிக்கையில் பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த சூலக்கரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், இது குறித்து போலீஸார் விசாரணை செய்தனர். அதில், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த அந்தோணிமுத்து என்பவரின் மகன் ஜான் அலெக்ஸாண்டர் என்பதும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளார் என்கிற விவரமும் தெரியவந்தது. இது தொடர்பாக நீதிமன்ற பெண் ஊழியர் உமா சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.