விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முழு சுகாதாரத்தை கடைபிடிக்கும் வகையில் நம்ம டாய்லெட் திட்டத்தின் சார்பில் நவீன சுகாதார வளாகம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது, அரசு மருத்துவமனைகள் அனைத்தும் தரம் உயர்த்துவதற்கு பல்வேறு திட்டங்கள் மருத்துவத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும், பிரசவ வார்டுகளில் குழந்தைகளுக்கு நோய்த்தொற்றை தடுக்கும் வகையிலும், உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் வெப்கேமரா மூலம் தொலைக்காட்சி பெட்டியில் பார்க்கும் வசதி, கொசுக்கள் அறைக்குள் புகாமலும், அதனால் நோயாளிகள் பாதிக்காமல் இருக்க ஜன்னல் பகுதிகளில் கொசுவலை உள்ளிட்டைவைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், மருத்துவமனை வளாகம், வெளிப்புற பகுதிகள் அனைத்தும் சுத்தமாக இருக்கும் வகையில் முட்புதர்கள் ஆகியவைகளும் அகற்றப்பட்டுள்ளன. இதேபோல், உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகிறவர்களை பார்க்க வருகிறவர்களுக்கு போதுமான கழிப்பறை வளாகம் இல்லாமல் இருந்தது. இதுபோன்ற காரணங்களால் குறிப்பிட்ட அளவில் உள்ள சுகாதார வளாகங்களை அனைவரும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் துர்நாற்றமும் ஏற்படுகிறது.
அதனால் திறந்த வெளிப்பகுதிகளையும் நாடுவதால் மருத்துவமனை வளாகங்களில் சுகாதாரக் கேடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இதை தவிர்க்கும் வகையில் வட்டார தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நவீன சுகாதார வளாகம் அமைக்கும் வகையில் நம்ம டாய்லெட் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
இது குறித்து மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் கதிரேசன் கூறுகையில், மருத்துவமனை வளாகங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் வகையில் நம்ம டாய்லெட் திட்டத்தின் மூலம் நவீன கழிப்பறை வளாகம் அமைக்கப்பட இருக்கிறது. அதில், முதல்கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.60 லட்சத்தில் இருபலாருக்கும் தலா 2 வீதம் நவீன சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.