காரைக்கால் அசைவ ஹோட்டலில் விற்பனை செய்யப்பட்ட மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்த புகாரின்பேரில், ஹோட்டல் உரிமையாளர், சமையல்காரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்கால் திருநள்ளாறு வீதியில் அசைவ உணவகம் ஒன்று செயல்படுகிறது. இங்கு தேனூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராக பணியாற்றும் மோகன்ராஜ் என்பவர் வெள்ளிக்கிழமை மதியம் நண்பர்களுடன் சாப்பிட்டார். விருந்துக்குப் பிறகு, வீட்டுக்கு ஒரு மட்டன் பிரியாணி பார்சல் வாங்கிச் சென்றார்.
பொறியியல் கல்லூரியில் பயிலும் இவரது மகள் திவ்யா (20) மாலையில் வீட்டுக்கு திரும்பியதும், பிரியாணியை சாப்பிட்டார். அப்போது பிரியாணியில் கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்த அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மோகன்ராஜ் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார், அசைவ உணவக உரிமையாளர் காரைக்கால் பெருமாள் கோயில் வீதியை சேர்ந்த முகம்மது யூனூஸ் (56), காரைக்கால் சாணக்காரத் தெருவை சேர்ந்த உணவக சமையல்காரர் முகம்மது ஹாலிப் (36) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.