

இலவச பட்டா நிலம் வழங்க வலியுறுத்தி தமிழ்புலிகள் அமைப்பின் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு சேர்வராயன்கோவில் தெருவில் அருந்ததியர் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்து தாணிப்பாறை அருகே உள்ள மகராஜாபுரத்தில் பட்டு வளர்ச்சி துறைக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த இடத்தை வழங்குவதற்கு வருவாய்த்துறையினர் பணிகள் மேற்கொண்டனர். இதை மகாராஜாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வலியுறுத்தி தடுத்தனர்.
இதைத் தொடர்ந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததால் தமிழ்புலிகள் அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் விடியல் வீரப்பெருமாள், மாவட்ட செயலாளர் தமிழ்முருகன் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் சின்னம்மாள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, குறிப்பிட்ட இடம் அல்லது மாற்று இடம் அப்பகுதியில் எங்குள்ளது என்பதை அறிந்து இலவச பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.