விருதுநகர் அருகே காவல் துறை வாகனத்தின் முன்பக்க டயர் வெடித்து எதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் மில் தொழிலாளி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இருந்து குற்றவாளிகளை, தேனிமாவட்டம் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்துவதற்காக காவல் துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அங்கு நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி விட்டு செவ்வாய்கிழமை மாலையில் பாளையங்கோட்டை செல்வதற்காக சூலக்கரை தனியார் நூற்பாலை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென முன்பக்க டயர் வெடித்து தாறுமாறாக ஓடி எதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில், ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த சூலக்கரை அருகே தாதம்பட்டியைச் சேர்ந்த மில் தொழிலாளி அழகுராஜா(40) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த வச்சக்காரப்பட்டி அருகே தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முதியவர் ஸ்ரீராமுலு(60), அவரது பேரன் ஸ்ரீதரன்(10) ஆகியோர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக தகவலறிந்த போலீஸார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு உயிரிழந்த மில் தொழிலாளியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.