திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக ஆர்.கே.நகர் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், பழைய இ.எஸ்.ஐ. அலுவலகம் தெருவைச் சேர்ந்த அழகர்சாமி மகன் வெங்கடேஷ் (32). இவர், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தார். அப்போது ஆட்சியரை இடமாற்றம் செய்யக்கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.
போராட்டம் குறித்து வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:எம்.பி.ஏ. பட்டதாரியான நான், இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன். எனது வேட்புமனு ஏற்கப்பட்டு, தொலைபேசி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் கடந்த ஆண்டில் புதிதாக 4 இளநிலைஉதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஒரு நகராட்சி பணிக்கு பணி நியமனம் செய்ய அந்த நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்களாகவும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் இனசுழற்சி முறையில் நேர்காணலுக்கு அழைப்பு விடுத்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு தேர்ந்தெடுக்காமல் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக விக்கிரமசிங்கபுரம் நகர்மன்றத் தலைவர், ஆணையர், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 13-4-2015 அன்று மனு அளித்தேன். அதுதொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததற்கு ஆட்சேபம் தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றதை போலீஸார் தடுத்துள்ளனர் என்றார்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வெங்கடேஷ் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.