தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நியூட்ரினோ குறித்த கருத்தரங்கம் விருதுநகரில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டட வளாகத்தில் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஐ.பரமசிவம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் எ.அமலராஜன் முன்னிலை வகித்தார். இக்கருத்தரங்கில் புதுதில்லி விஞ்ஞான பிரசார் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று பேசுகையில், நியூட்ரினோ பூமி தோன்றிய காலத்திலிருந்தே இருக்கிறது. அவை சூரியனிலிருந்தும் வளி மண்டலத்திலிருந்தும் காஸ்மிக் கதிரிலிருந்தும் உருவாகிறது. நாள்தோறும் ஒரு நொடிக்கு பல லட்சம் நியூட்ரினோக்கள் நமது பூமியை ஊடுருவிச் செல்கிறது. இவை மனிதனுக்கு எவ்வித தீங்கும் விளைவிப்பதில்லை.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வுக் கூடம் என்பது அடிப்படை அறிவியலை அறிந்து கொள்ளும் ஒரு ஆய்வு கூடம் ஆகும். ஒரு கிலோ மீட்டருக்கு மலையை குடைந்து அங்கு இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்படுகிறது. இப்பகுதியில் மிகவும் பழமையான மலையாக இருப்பதால் இங்கு அமைக்கப்படுகிறது. இக்கூடம் அமைவதால் அப்பகுதியில் கதிரியக்கம் உள்பட எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என விளக்கமாக எடுத்துக் கூறினார்.
இதில், அறிவியல் இயக்ககத்தின் நிர்வாகிகள் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.