பிரதமரின் பயணத்தால் இலங்கை தமிழர்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது: இல.கணேசன்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தால் அங்கு வசிக்கும் தமிழர்களிடையே புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.....


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தால் அங்கு வசிக்கும் தமிழர்களிடையே புதிய நம்பிக்கை பிறந்துள்ளது என்றார் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:
இந்திய பிரதமர் மோடியின் இலங்கை பயணம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 13 ஆவது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தவும், இந்தியாவில் உள்ளதுபோல கூட்டாட்சி தத்துவத்தின்படி மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பிரதமர் பதவிக்கு ஏற்ற வகையில் இலங்கைக்கு எடுத்துரைத்துள்ளார்.
இலங்கையில் முன்புபோல தமிழர்கள் இயல்பு நிலையில் வசிக்க வேண்டும். ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும். மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நிலைப்பாடு. நிலம் ஒப்படைப்பு, காவல் உள்ளிட்ட பொறுப்புகள் மாநில அரசிடம் இல்லை. இருப்பினும ஆட்சிமாற்றத்துக்குப் பின்பு தமிழர்களுக்குத் தேவையான நிலங்களை வழங்க புதிய அதிபர் சிறிசேனா தலைமையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை வரவேற்கதக்கது.
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபட்சவை, பிரதமர் மோடி சந்தித்ததை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுவரவேற்கத்தக்கதல்ல. எந்தவொரு நாட்டுத் தலைவரும் பிற நாட்டுக்குச் செல்லும்போது அந்த நாட்டின் இப்போதைய ஆட்சியாளர்கள், முந்தைய அல்லது தம்மோடு நட்புடன் பழகிய முந்தைய ஆட்சியாளர்களைச் சந்தித்து பேசி வருவது மரபு. இந்தியாவுக்கு எந்த நாட்டுத் தலைவர்கள் வந்தாலும் குடியரசுத்தலைவர், பிரதமர், அமைச்சர்களை மட்டுமன்றி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியையும் சந்தித்துச் செல்வது வழக்கம் அதுபோன்றதுதான் பிரதமர் மோடி-ராஜபட்ச சந்திப்பு.
இலங்கை மீனவர் பிரச்னையைப் பொறுத்தவரை மீன்பிடிக்கும் முறைகளால் எழுந்துள்ள சிக்கலைத் தீர்க்க வேண்டியது அவசியமாகிறது. இரட்டைமடி வலை உள்ளிட்ட பிரச்னைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதே நிரந்தரத் தீர்வாக இருக்கும். அதேநேரத்தில் விதிகளை மீறும் மீனவர்களை எச்சரிப்பதும், கைது செய்வதும்தான் சரியானது. தாக்குதல் நடத்துவது முறையானதல்ல.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்த மசோதாவில் திருத்தங்களை பல கட்சிகள் கூறியதால், 6 திருத்தங்கள் செய்யப்பட்டன. அதற்கு மாநிலங்களவையில் அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்தது வரவேற்கத்தக்கது. இது நாட்டின் நலன் மீது கொடுக்கப்பட்ட ஆதரவுதான். அதனை தமிழகத்தில் சிலர் அரசியலாக பார்க்கிறார்கள்.
தமிழகத்தில் நிகழ்ந்த ஊழல்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்கு பின்பும் ஊழல், லஞ்சம் போன்றவை முற்றிலும் நீங்கியது போன்ற வியக்கத்தக்க மாற்றங்கள் வராமல் உள்ளது. இதனை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு புதிதாக பல அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்கெனவே உள்ள கட்டமைப்புடன் கூடுதலாக ஒரு ஏவுதளம் அமைப்பது சுலபமானது. அந்த வகையில்தான் விஸ்தரிப்பின் கீழ் அமைக்கத் திட்டமிட்டிருப்பார்கள். இருப்பினும் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதால் தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தால் அந்தத் திட்டத்தை தமிழக பா.ஜ.க. வரவேற்கும்.
தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மொத்தம் 4 ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் பங்கேற்று பேச உள்ளேன். தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 36 ஆயிரமாக இருந்த பா.ஜ.க. உறுப்பினர் எண்ணிக்கை இப்போது 22 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் ஒரு லட்சம்பேர் கட்சியில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...