திருச்சுழி அருகே குடிதண்ணீர் வசதி செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்கிழமை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் சமரசம் செய்து வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழியை அடுத்த எம்.ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது மேலகண்டமங்களம் கிராமம். இக்கிராமத்தில் 300 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிற நிலையில் விவசாயம் மற்றும் நூற்பாலைகளில் கூலி வேலை செய்து வருகின்றனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள கை பம்புகளில் உப்பு நீராகவே இருப்பதால் குடிநீராக பயன்படுத்த முடியாத நிலையிருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் குடிதண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அருகில் உள்ள கிராமங்களில் விவசாய கிணறுகளில் தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலையுள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி தேமுதிக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி தலைமையில் பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஒன்றியக்குழு தலைவர் இந்திராமோகன் ஆகியோர் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதையடுத்து ஆழ்குழாய் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.