திருச்சி, திருவானைக்கா ஸ்ரீசம்புகேசுவரர் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயில் பங்குனிப் பெருவிழா திருத்தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
திருவானைக்கா ஸ்ரீசம்புகேசுவரர் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயில், பஞ்சபூதத் தலங்களில் நீர் தலமாகக் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனிப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான விழா, கடந்த பிப். 27-ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான திருத்தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. காலை 7.35 மணிக்கு ஸ்ரீசம்புகேசுவர் சுவாமி திருத்தேருக்கு வடம்பிடிக்கப்பட்டது. சம்புகேசுவரர் சுவாமி திருத்தேர் தெற்கு வீதியை அடைந்த பின்னர், காலை 9.15 மணிக்கு அகிலாண்டேசுவரி திருத்தேருக்கு வடம்பிடிக்கப்பட்டது. சுவாமி, அம்பாள் தேரோட்டம் தொடங்கும் முன்பாக, விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் தேரோட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.