விருதுநகர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த போலி ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய நபர் தலைமறைவானதால் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள பாவாலி கிராமத்தைச் சேர்ந்த முத்துவின் மகன் வடிவேல்(35). இவர் கடந்த 23-ம் தேதி வடமலைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு தலையாரி பாண்டியம்மாளிடம் நத்தம் புறம்போக்கு நிலம் தொடர்பான தகவல் கேட்டாராம். அதோடு, அதிகாரி வருவார் எனக் கூறி தலையாரி வெளியே தண்ணீர் எடுக்க சென்றாராம். அந்த இடைவெளியை பயன்படுத்தி ஆவணங்களை புரட்டி பார்த்த நிலையில் ஆள் வருவதை அறிந்து மூடிவைத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து கடந்த 2 நாள்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் காவேரி நில வரைபட ஆவனங்களை சரிபார்த்துள்ளார். அப்போது, நத்தம் புறம்போக்கு வரைபட ஆவணத்தின் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக தலையாரியிடம் விபரங்களை கேட்டதில் வடிவேல் அலுவலகம் வந்து சென்றது குறித்து தெரிவித்தாராம்.
இது தொடர்பாக சந்தேகமடைந்த கிராம நிர்வாக அலுவலர் வருவாய்த்துறையிடமும், ஆமத்தூர் காவல் நிலையத்திலும் வடிவேல் மீது புகார் செய்தார். அதன் அடிப்படையில் வருவாய்த்துறையினர், போலீஸார் ஆகியோர் பாவாலிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற போது வீட்டில் யாரும் இல்லை. பின்னர் மீண்டும் திங்கள்கிழமை காலையில் சென்று கிராம மக்கள் முன்னிலையில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த தகர பெட்டியில் கிராம நிர்வாக அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் நில வரைபட ஆவணங்கள், மற்றவர்க்ளின் பெயர்கள் அடங்கிய பட்டாக்கள், நிலத்திற்கான பத்திரங்கள், நிரப்பாதா இறப்பு சான்றிதழ்கள், கிராம நிர்வாக அலுவலரின் முத்திரை ஆகியவைகள் இருந்தது. அதை உடனே போலீஸார்கள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து ஆமத்தூர் போலீஸார் வடிவேல் மீது வழக்கு பதிவு செய்ததோடு, போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளாரா, இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது போன்றவைகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தனிநபர் வீட்டில் போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.