நரிக்குடி அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் வியாபாரியை தாக்கியவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவானவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே நரிக்குடியைச் சேர்ந்தவர் மோகன். இவர் இப்பகுதியில் பாத்திர வியாபாரம் செய்வதோடு, கொடுக்கல் வாங்கல் தொழிலும் செய்து வருகிறாராம். இந்நிலையில் இவரிடம் இருந்து மிதவைக்குளத்தைச் சேர்ந்த கமல் என்ற கருப்பு ரூ.50 ஆயிரம் கடன் பெற்றிருந்தாராம். அதில் 40 ஆயிரம் வரையில் திருப்பிக் கொடுத்துள்ளார். அதையடுத்து மீதப்பணம் ரூ.10 ஆயிரத்தை தராமல் தாமதம் செய்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் மோகன் வசூலுக்கு சென்று கொண்டிருந்த போது எதிரே கருப்பு வந்தாராம். அப்போது, அவரிடம் கொடுத்த பணத்தைக் கேட்ட போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த கருப்பு தகாத வார்த்தைகள் பேசியதோடு இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். அதோடு, அவருடைய இருசக்கர வாகனத்தையும் தீவைத்து எரித்தாராம். இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த மோகன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் நரிக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.