வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆன்லைன் தடையால் பதிவை புதுப்பிக்க முடியாமல் அவதிப்படும் பதிவுதாரர்கள்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆன்லைன் கிடைக்காத காரணத்தால் பதிவை புதுப்பிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருவதாக பதிவுதாரர்கள் புகார் தெரிவித்து
Updated on
1 min read

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆன்லைன் கிடைக்காத காரணத்தால் பதிவை புதுப்பிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருவதாக பதிவுதாரர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

மாநில அளவில் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணிப்பொறி மையமாக்கப்பட்டு செயல்பட்டு வருவதோடு,  வேலைவாய்ப்புக்கு பதிவு செய்தவர்களின் விவரங்களும் கணிப்பொறியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதற்கு முன்பு வரையில் பதிவுதாரர்கள் அலுவலகத்திற்கு வந்து வரிசையில் நெருக்கடியில் காத்திருந்து பதிவு செய்ய வேண்டும். தற்போது, அலைச்சலை குறைக்கும் வகையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து உடனே அடையாள சீட்டையும் பதிவிறக்கம் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகிறவர்களுக்கு பதிவு செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஒரு சில நாள் பணம் செலுத்தவில்லையென கூறி பிஎஸ்என்எல் நிர்வாகம் ஆன்லைனை துண்டித்து விடுகிறது. அப்போது, வருகின்ற பதிவுதாரர்களின் விவரங்களை பதிவு செய்ய முடியாத நிலையேற்படுகிறது. இதனால் வெளியில் உள்ள இணையதள மையங்களில் எடுக்க வேண்டியுள்ளது. மேலும், இதுபோன்று அலுவலகத்தில் தடை என்றால் உடனடியாக கூடுதலாக பணம் கொடுத்து பதிவை புதுப்பிக்க வேண்டிருப்பதாகவும் பதிவுதாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியைச் சேர்ந்த ராஜவேல் என்பவர் கூறுகையில், தனது நடத்துநர் தகுதியை கடைசி தேதிக்கு முன்பாக மறுபதிவு செய்வதற்காக அலுவலகத்திற்கு வந்தேன். ஆனால், இங்கு ஆன்லைன் தடை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து வெளியில் உள்ள இணையதள மையங்களில் ரூ.50 வசூலிப்பதற்கு பதிலாக, கூடுதலாக ரூ.100-க்கு  பதிவு செய்ததாகவும், பணம் இல்லாததோர் திரும்பி செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆன்லைனுக்கான கட்டணத்தை அரசு ஒதுக்கீடு செய்து எல்காட் நிறுவனம் மூலம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு செலுத்துகிறது. இந்நிலையில், கட்டணம் செலுத்தவில்லையென கூறி தடை செய்கின்றனர். பதிவு மூப்பு விவரங்கள் சரி பார்ப்பதற்கும், மறு பதிவுக்காகவும் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதுபோன்ற நேரங்களி்ல் தடை ஏற்படுகிறது. எக்காரணம் கொண்டும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் ஆன்லைனை துண்டிக்க கூடாது என்பது விதிமுறையாகும். இதுபோன்று வாரத்திற்கு குறிப்பிட்ட நாள்கள் ஆன்லைன் தடையேற்படுவது தொடர்பாக வேலைவாய்ப்புத்துறை உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், தவிர்க்க முடியாத அரசுக்கு அனுப்பும் ஆவணங்கள் மற்றும் தகவலை சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்ய வேண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com