நத்தம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த 6 காட்டு மாடுகளில், கன்று உள்பட 2 மாடுகள் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 3 மாடுகளை வனத்துறையினர் சனிக்கிழமை மீட்டனர்.
கடந்த 4 நாள்களுக்கு முன்பாக நத்தம் அடுத்துள்ள பட்டணம்பட்டியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் தோட்டத்துக்கு சில காட்டு மாடுகள் உணவு தேடி வந்துள்ளன. பட்டணம்பட்டி குடியிருப்பு பகுதியிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள மாந்தோப்பில், 15 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது. வறட்சியால், கிணற்றில் தண்ணீர் இல்லாமல் புதர் மண்டி கிடந்துள்ளது.சனிக்கிழமை காலை தோட்டத்திற்கு சென்ற ராமலிங்கத்திற்கு தூர் நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர், கிணற்றின் அருகே சென்றபோது, 6 மாடுகள் கிணற்றுக்குள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து, அழகர்கோயில் வனச் சரகர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் வனச்சரகர் ப.பகவதி, வனவர்கள் எஸ்.கருப்பு, எஸ்.ஜெயசீலன், வனக்காப்பாளர் எஸ்.ஞானபிரகாசம் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். கன்று மற்றும் 2 மாடுகள் உயிரிழந்துவிட்டதை அறிந்த வனத்துறையினர், எஞ்சியுள்ள மாடுகளை உயிரிருடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஜெசிபி இயந்திரம் மூலம் கிணற்றின் ஒரு பகுதியில் சரிவு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்றன. சுமார் 4 மணி நேரத்திற்கு பின், மண் சரிவு ஏற்படுத்தப்பட்டதை அடுத்து, கிணற்றில் சிக்கித் தவித்த மாடுகள் ஒவ்வொன்றாக வெளியேறி காட்டுக்குள் ஓடின. அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த மாடுகளை வெளியில் எடுக்கும் பணிகள் நடைபெற்றன. இதுகுறித்து வனச்சரகர் ப.பகவதி தெரிவித்ததாவது:-
கிணற்றில் விழுந்ததில் 3 மாத கன்று, ஒரு மாடும், ஒரு காளையும் உயிரிழந்துவிட்டன. மீட்கப்பட்ட 2 கிடேரி மற்றும் ஒரு காளையும், ஆரோக்கியமாக இருந்ததால், மண் சரிவில் ஏறி வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.கால்நடை மருத்துவர்கள் பிரேத பிரசோதனை செய்த பின், கன்று மற்றும் 2 மாடுகளின் உடல்களும் வனப் பகுதியில் புதைக்கப்பட்டன. ஒரே நேரத்தில் 6 மாடுகள் கிணற்றுக்குள் விழுந்துள்ளது இதுவே முதல் முறை என்றார் அவர்.