விருதுநகர் மாவட்டத்தில் இலவச கட்டாய உரிமைச் சட்டத்தின் படி மெட்ரிக் பள்ளிகளில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் அளிக்க ஜூன் 15-ம் தேதி வரையில் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தனியார் சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை உடனடியாக அனைத்து பள்ளிகளும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் முதல் வகுப்பில் எத்தனை இடம், அதில் 25 சதவீதம் என்பது எவ்வளவு என்கிற விவரங்களை, ஒவ்வொரு தனியார் பள்ளியும் நுழைவு வாயிலில் தகவல் பலகையில் வைக்க வேண்டும். அதேபோல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் 8-ம் தேதி முதல் 19-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, ஜூன் 15-ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் அளிக்க கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட இடங்களுக்கு மேல் அதிகமாக விண்ணப்பம் செய்திரு்ந்தால் இட ஒதுக்கீட்டு முறையில் கல்வித்துறை அதிகாரிகள், பெற்றோர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். அதையடுத்து, தேர்வானோர் பட்டியலை அன்றைய நாளில் 2 மணிக்கு பள்ளி நுழைவு வாயில் பகுதியில் அனைவருக்கும் தெரியும் படியாக தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.
அதையடுத்து, தங்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியலின் இரு பிரதிகளை மெட்ரிக்குலேசன் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு மெட்ரிக்குலேசன் பள்ளிக்கும் அரசு நிர்ணயித்துள்ள கட்டண பட்டியலையும் அறிவிப்பு பலகையில் இடம் பெறச் செய்து, அதை பெற்றோர்களின் பார்வைக்கு தெரியும் படியாக வெளியிடவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.