10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: 3 கல்வியாண்டுகளாக இழந்த முதலிடத்தை விருதுநகர் மாவட்டம் திரும்ப பெறுமா?

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை(21-ம்தேதி) வெளியாக இருப்பதால், அதில் கடந்த 3 கல்வி ஆண்டுகளாக இழந்த முதலிடத்தை திரும்ப பிடிக்குமா என மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள்
Updated on
1 min read

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை(21-ம்தேதி) வெளியாக இருப்பதால், அதில் கடந்த 3 கல்வி ஆண்டுகளாக இழந்த முதலிடத்தை திரும்ப பிடிக்குமா என மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து ஏப்.9ம் தேதி வரையில் நடைபெற்றது. இத்தேர்வை விருதுநகர் வருவாய்  மாவட்டத்தில் உள்ள விருதுநகர் கல்வி மாவட்டத்தில் மாணவர்கள்-5740, மாணவிகள்-5612 என 11352 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் மாணவர்கள்-4829, மாணவிகள்-4844 என 9673 பேரும், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் மாணவர்கள்-4803, மாணவிகள்-4882 பேரும் என 9685 பேரும் என மொத்தம் 30710 பேர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள். இத்தேர்வுக்கான முடிவுகளை நாளை(வியாழக்கிழமை) வெளியிடுவதற்கான பணிகளில் பள்ளிக்கல்வித்துறை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் 1986 முதல் 2011 வரையில் 26 ஆண்டுகள் தொடர்ந்து 10-ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றது. அதையடுத்து, கடந்த 2011-12ல் 3-ம் இடத்திற்கும், 2012-13ல் 5-ம் இடத்திற்கும், 2013-14ல் 4-ம் இடமும் பெற்று பின்தங்கியது. இந்நிலையில், கடந்த 3 கல்வி ஆண்டுகளாக தவறவிட்ட முதலிடத்தை பிடிக்க வேண்டும். இதற்காக மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் 100 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு ஆசிரியர்கள் மூலம் தொடர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாசிப்பதிலும், படிப்பில் பின் தங்கிய மாணவ, மாணவிகளை கண்டறிந்து தனிக்கவனம் செலுத்தி ஒவ்வொரு பாடத்திலும் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் அளவிற்கு ஆசிரியர்களால் சிறப்பு பயிற்சியும் அளித்துள்ளனர்.

மேலும், மாணவ, மாணவிகளின் திறமையை சோதித்து அறியும் வகையில் வகுப்பறையில் திருப்புதல் தேர்வு நடத்தி தேர்ச்சி திறனையும் மதிப்பீடு செய்து, பொதுத்தேர்வுக்கு தயார் செய்யப்பட்டுள்ளது. அதனால், நிகழாண்டில் மாநிலத்தில் சிறப்பிடத்தை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற காரணங்களால் நிகழாண்டிலாவது சிறப்பிடத்தை தக்க வைக்குமா என மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com