விருதுநகர் மாவட்டத்தில் பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மூட ஆட்சியர் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பயன்படாத ஆழ்துளை கிணறுகளை வருகிற ஜூன் 15-ம் தேதிக்குள் மூட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பயன்படாத ஆழ்துளை கிணறுகளை வருகிற ஜூன் 15-ம் தேதிக்குள் மூட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

உள்ளாட்சி அமைப்புகளில் ஆழ்குழாய் கிணறு, திறந்தவெளி கிணறு, பயன்பாடற்ற மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளையும் சேர்த்து அனைத்து ஊராட்சி செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் இணைந்து 26,27 ஆகிய நாள்களில் ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதைத் தொடர்ந்து பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை, அதை அமைத்தவர்களிடம் பாதுகாப்பாக மூடுவதற்கு வலியுறுத்த வேண்டும்.

மேலும், ரிக் வாகன உரிமையாளர்கள் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு முன்பாக ரூ.15 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலையை மாவட்ட நிர்வாகத்திடம் அளித்து பதிவு செய்த பின்னரே குழாய் போடும் பணியை தொடங்க வேண்டும். இப்பணி நடைபெறும் இடங்களில் கட்டாயம் தகவல் பலகை வைக்க வேண்டும். அதில், பயனீட்டாளர் பெயர், நோக்கம் மற்றும் வாகன உரிமையாளரின் பெயர் ஆகியன இடம் பெற்றிருப்பது அவசியம் ஆகும். அதேபோல், கிணறு தோண்டும் பணி முடிவடையாத நிலையில் அதைச்சுற்றி பாதுகாப்புடன் கம்பி வேலி அமைத்து மூட வேண்டும். இதுபோன்றவைகளை கடைபிடிக்காத ரிக் வாகன உரிமையாளர்கள், கிணறு  உரிமையாளர்கள் ஆகியோர் மீது சட்டவிதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பின்னர் அது தொடர்பான தகவல்களை அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரிடம் அளிக்கவும்  வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com