ஒவ்வொரு குழந்தையையும் நாட்டின் மனிதவளங்களாக மாற்றுவது என்பது ஒவ்வொரு ஆசிரியரின் தலையாய கடமையாகிறது என்று விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அ.புகழேந்தி கூறினார்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மூன்று நாட்கள் இரு கட்டங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் 167 ஆசிரியர்களுக்கு கணித உபகரணப்பெட்டியின் பயன்பாடு மற்றும் கற்றலை வலுப்படுத்துதல் பயிற்சி நடைபெற்றது. பயிற்சி நிறைவு நாளில் கலந்து கொண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அ.புகழேந்தி பேசுகையில் கூறியதாவது:
அண்மையில் நடத்தப்பட்ட மாநில அடைவு ஆய்வில் பெறப்பட்ட முடிவுகளிலிருந்து கணக்குப் பாடத்தில் அடிப்படைக் கருத்துக்களில் குழந்தைகள் இடர்படும் தலைப்புகள் அடையாளம் காணப்பட்டன. குழந்தைகள் பெற்ற அடைவுகளின் அடிப்படையில், கற்கும்போது ஏற்படும் பிழைகள் மற்றும் இடர்பாடுகளைக் களைவதற்கு எளிமையான கற்றல் பாதைகளைத் தீர்வாக கொண்டு இப் பயிற்சி தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கணித உபகரணப்பெட்டியிலுள்ள பொருட்களில் ஆழமான செயல் அனுபவங்களை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு கணித உபகரணத்திற்கும் அன்றாட வாழ்க்கைக் கணக்குகள் இணைத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் ஒவ்வொரு செயல்பாட்டைக் கற்பிக்கும்போதும், மாணவர்களிடம் சிந்தனைத் தூண்டல் ஏற்பட்டுள்ளதா? என்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும் தானே கற்றல் கணித உபகரணப்பெட்டி பொருட்கள் குழந்தைகளுக்கு கணக்குப் பாடத்திலுள்ள அடிப்படைச் செயல்பாடுகளில் ஆழமான புரிதலை ஏற்படுத்தும்.
குழந்தைகள் மிக எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் தானே பொருட்களைக் கையாண்டு கற்கும் வகையில் கணித உபகரணப்பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது இப் பயிற்சி கணக்குப் பாடத்தின் அடிப்படைக் கருத்துக்களை கற்கும் போது ஏற்படும் இடர்பாடுகளைக் களைவதிலும், கற்றலை வலுவடையச் செய்யவும் ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாய் அமைந்திருக்கும். இதனை வகுப்பறையில் பயன்படுத்தி, ஒவ்வொரு குழந்தையையும் நாட்டின் மனிதவளங்களாக மாற்றுவது என்பது ஒவ்வொரு ஆசிரியரின் தலையாய கடமையாகும் என்றார் அவர்.
பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி தலைமையில் ஆசிரியப் பயிற்றுநர்கள் கற்பகம், சுந்தரேஸ்வரி, முத்துலட்சுமி, உமா மகேஸ்வரி ஆகியோர் அளித்தனர்