கடல் சீற்றம்: காரைக்கால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை
By dn | Published On : 03rd December 2015 03:13 PM | Last Updated : 03rd December 2015 03:13 PM | அ+அ அ- |

வங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் காரைக்கால் மாவட்ட விசைப்படகு, பைபர் படகுகள் அனைத்தும் வியாழக்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அவ்வப்போது உருவாகி வருவதால் தொடர் மழை பெய்துவருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இலங்கை, வட தமிழகத்தையொட்டி உள்ள தென் மேற்கு வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு மையம் கொண்டிருப்பதால், தொடர் மழை பெய்துவருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
கடலோர மாவட்டமான காரைக்கால் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பகல், இரவு முழுவதும் இடைவிடாத மழை பெய்துவருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடிந்தாலும், சிறிய வகை மோட்டார் பைபர் படகுகள், சீற்றத்துடன் காணப்படும் அலையை கடந்து செல்வது இயலாத நிலையால், வியாழக்கிழமை சிறிய படகுகள் அனைத்தும் முடக்கப்பட்டது.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வழக்கமாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் புதன்கிழமை இரவு முதல் நிறுத்தப்பட்டன. முன்னரே கடலுக்கு சென்ற படகுகள் மட்டும் வியாழக்கிழமை துறைமுகத்திற்கு திரும்பி வந்தது.
மாவட்டத்தின் 11 மீனவ கிராமங்களில் இருந்தும் பைபர் மோட்டார் படகுகள், அந்தந்த மீனவ கிராமங்களின் கரையோரத்தில், படகுகளை பாதுகாப்பாக ஏற்றி வைத்துள்ளனர். இதுகுறித்து காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் வியாழக்கிழமை கூறியது :
தினமும் அதிகாலை 3 மணிக்கு கடலுக்கு புறப்பட்டுச் சென்று 7 மணியளவில் கரைக்கு திரும்புவது வழக்கம். கடலில் 5 முதல் 10 கி.மீ. தூரம் இந்த படகில் செல்வோம். கடந்த 2 நாள்கள் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், படகை இயக்கிச் செல்வது இயலாததாகும். இதனால் படகுகள் பாதுகாப்பாக கரையேற்றி நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கிராமத்தில் மட்டும் 80 பைபர் படகுகள் உள்ளன.
மீனவர்களுக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் தொழில் முடக்கத்தின்போது, இலவச அரிசி மற்றும் நிவாரணங்கள் புதுச்சேரி அரசால் தரப்படுவது உண்டு. நிகழாண்டுக்குரியதை உடனடியாக தருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.