

முன்னாள் தமிழக முதன்மைச் செயலர் ராமமோகனராவ் தவறிழைத்துவிட்டு அனுதாபம் தேடும் நோக்கில் பேசுவது சரியல்ல. அவரை மக்கள் நம்பமாட்டார்கள் என பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் கூறினார்.
மதுரையில் செவ்வாய்க்கிழமை மாமதுரை மக்கள் மன்றம் சார்பில் அவருக்கு நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக தலைமைச் செயலராக இருந்த ராமமோகனராவ் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரிச்சோதனை ஆதாரங்களின் அடிப்படையிலே நடத்தப்பட்டுள்ளது. சோதனையில் கட்டி கட்டியாக தங்கமும், கத்தைகத்தையாகப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட தங்கம், பணத்துக்கு உரிய ஆவணங்களை காட்டி சட்டரீதியாகவே அவர் பதில் கூறவேண்டும். ஆனால், சோதனை நடத்தப்பட்டதையும், துணை ராணுவம் வந்ததையும் கூறி பிரச்னையைத் திசைதிருப்புகிறார்.
வீட்டுச்சிறையில் வைத்ததாக அவர் கூறுவது சரியல்ல. தவறு செய்தவரை சிறையில் அடைக்கவேண்டும் என்பதே மக்கள் கருத்து. தவறை ஒப்புக்கொண்டு அதற்கு துணைபோனவர்கள் விவரத்தையும் ராமமோகனராவ் வெளியிடவேண்டும். அனுதாபம் தேடும் வகையில் அவர் பேசுவது நல்லதல்ல. மக்களும் அவரை நம்பமாட்டார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தவறிழைத்தால் காப்பாற்றுவார் என்பது போல ராமமோகனராவ் கூறிய கருத்தை அதிமுகவினர் கண்டிக்கவேண்டும். தவறிழைத்தால் தலைமைச் செயலர் வீட்டிலே கூட சோதனை நடக்கும் என்பதை மக்களும் விரும்புவார்கள்.
ஒரே விஷயத்தில் பாதிக்கப்ப்டடவர்கள் என்ற அடிப்படையிலே ராமமோகனராவுக்கு மம்தா, ராகுல் ஆகியோர் ஆதரவளிக்கின்றனர். அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பாலசுப்பிரமணியன் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தது நியாயமல்ல. இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.