தீவிர தர பரிசோதனைக்குப் பிறகே, நியாய விலைக் கடைக்கு பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்தார்.
சென்னை கோபாலபுரம் நுகர்பொருள் வாணிபக் கழகம், பொது விநியோகத் திட்ட கிடங்கு, அமுதம் நியாய விலை அங்காடிகள், பண்ணை பசுமை நுகர்வோர் கடை ஆகியவற்றில் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
அப்போது அலுவலர்களிடம் அவர் பேசியது:
பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விலையில்லா அரிசி, மானிய விலையில் வழங்கப்படும் சர்க்கரை, கோதுமை, பருப்பு வகைகள், பாமாயில் ஆகியன உணவு பொருள் வழங்கல் துறை ஆணையரின் மாத ஒதுக்கீட்டின்படி, கிடங்கிலிருந்து நியாய விலை அங்காடிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. கிடங்குகளிலிருந்து விடுவிக்கப்படும் பொருட்கள் தீவிர தர பரிசோதனைக்குப் பின்னரே எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் பொருள்களை போதுமான அளவு இருப்பு வைத்து அட்டைதாரர்களுக்கு சீரான முறையில் விநியோகம் செய்யப்பட வேண்டும்.
மூட்டைகள் அனைத்தையும், சரியான முறையில் எடையிட்டு ஒப்புதல் பெற்ற பிறகே, லாரிகளில் ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, உணவுத்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் கா. பாலச்சந்திரன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் இருந்தனர்.