தூத்துக்குடி அருகே பயங்கரம்: தலையை துண்டித்து கையில் எடுத்து சென்ற கும்பல்

தூத்துக்குடி அருகே திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் உறவினரின் உதவியாளார்கள் இருவர் கொலை
தூத்துக்குடி அருகே பயங்கரம்: தலையை துண்டித்து கையில் எடுத்து சென்ற கும்பல்
Updated on
1 min read

தூத்துக்குடி அருகே பழையகாயலில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் உறவினரின் உதவியாளார்கள் பட்டப் பகலில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின்போது கொலை செய்யப்பட்ட ஒருவரின் தலையை துண்டித்து அக்கும்பல் கையில் எடுத்து சென்றுள்ளது.

அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் தலைவராக இருந்து வருவர் சுபாஷ் பண்ணையார். இவரது சகோதரர் வெங்கடேஷ் பண்ணையார், சென்னையில் நடைபெற்ற மோதலில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பின்னர், கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் நிறுத்தப்பட்டார் வெங்கடேஷ் பண்ணையார் மனைவி ராதிகா செல்வி. வெற்றி பெற்ற அவர் பின்ன மத்திய இணை அமைச்சராகவும் சிலகாலம் பணியாற்றினார்.

இந்நிலையில், சுபாஷ் பண்ணையார் தூத்துக்குடி அருகேயுள்ள பழையகாயல் சர்வோதயாபுரியில்  தனக்குச் சொந்தமான தோட்டத்தில் இன்று (மார்ச் 8) பிற்பகலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, திடீரென புகுந்த 20 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்தவர்களை அரிவாளால் வெட்டத் தொடங்கினராம். இதில், சுபாஷ் பண்ணையாரின் உதவியாளரும், முடிதிருத்தும் தொழிலாளியுமான ஆறுமுகச்சாமியும், அய்யாக்குட்டி என்பவரும் உயிரிழந்தனர். பின்னர், கொலைக் கும்பல் ஆறுமுகச்சாமியின் தலையை துண்டித்து கையோடு எடுத்துச் சென்றுவிட்டனராம்.

தோட்ட பராமரிப்பு பணிகளை சுபாஷ் கடந்த நான்கு நாள்களாக கண்காணித்து வந்ததாகவும், அதனை நோட்டமிட்ட கும்பல் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளதாகவும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, துண்டிக்கப்பட்ட ஆறுமுகச்சாமியின் தலை தூத்துக்குடி- திருநெல்வேலி சாலையில் உள்ள தெய்வச்செயல்புரம் பேருந்து நிறுத்தத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதிபாண்டியனின் படத்துடன் கூடிய பெயர்பலகையின் கீழ் வீசப்பட்டிருந்ததாம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதிபாண்டியன் திண்டுக்கல் அருகே கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் ஆறுமுகச்சாமி மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

எனவே, பழிக்குப்பழியாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுபாஷ் பண்ணையாரை கொலை செய்யும் நோக்கில் அந்த கும்பல் வந்திருக்கலாம் என்றும் அவர் தப்பி இருக்கலாம் என்றும் போலீஸார் தரப்பில் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com